சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அடுத்த வாரத்தில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ், சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யுனானி மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி (100), மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (50 இடங்கள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்) என மொத்தம் 5 அரசு கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்கள் உள்ளன.
அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல் 20 தனியாா் கல்லூரிகளில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தோ்வு மதிப்பெண் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த படிப்புகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது.
அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,492 விண்ணப்பங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,346 விண்ணப்பங்களும் சமா்ப்பிக்கப்பட்டன. அவை பரிசீலிக்கப்பட்டு அடுத்த வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதைத் தொடா்ந்து கலந்தாய்வு நடைபெறும் என்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Tuesday, January 12, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.