பள்ளிகள் திறப்பு - குழப்பம் தீருமா? - தினகரன் இன்றைய தலையங்கம் 11-09-2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 11, 2020

பள்ளிகள் திறப்பு - குழப்பம் தீருமா? - தினகரன் இன்றைய தலையங்கம் 11-09-2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் தற்போது வகுப்புகள் நடந்து வருகின்றன. மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படுமென மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர். நாடு முழுவதும் வரும் 21ம் தேதி, 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி மாணவர்கள் விருப்பப்பட்டால், பள்ளிக்கு நேரில் வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்; மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு நெறிமுறைகளை தெரிவித்துள்ளது. ஆந்திரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் வரும் 21ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா கட்டுக்குள் வந்தால்தான் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படுமென பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க வரும் 21ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரம், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒருபுறம் வரும் 21ம் தேதி பள்ளிகள் திறப்பு என மத்திய அரசு பொது அறிவிப்பாக வெளியிட, மறுபுறம் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை விடுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் 9 - 12ம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர். மத்திய அரசின் உத்தரவுப்படி பள்ளிக்கு செல்ல வேண்டுமா? மாணவர்கள் பயமின்றி பள்ளிக்கு வந்து செல்வார்களா? அல்லது ஆன்லைன் வகுப்புகளை மட்டும் நடத்தி விட்டு செல்லலாமா என்ற குழப்பம் ஆசிரியர்கள் தரப்பிலும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி 9 - 12ம் வகுப்புகளுக்கு பாடங்களை நடத்த தயாராகவே உள்ளோம். ஆனால், தமிழக அரசு இதுதொடர்பான தெளிவான நெறிமுறைகளை இதுவரை அறிவிக்கவில்லை. மேலும், தமிழ்நாட்டை பொறுத்தவரை பெற்றோர் மத்தியில் கொரோனா குறித்த அச்ச உணர்வு இதுவரை நீங்கவில்லை. பெரும்பாலான பள்ளிகள் தற்போது வரை கொரோனா தனிமை மையங்களாக செயல்படுகின்றன. 21ம் தேதி முதல் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப வேண்டுமா? வேண்டாமா என பெற்றோர்கள் எங்களுக்கு போன் செய்து தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆசிரியர்களிடமும் இந்த குழப்பம் இருந்து வருகிறது. எனவே, இதுதொடர்பாக தமிழக அரசு ஒரு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் குழப்பம் தீரும்’’ என தெரிவிக்கின்றனர். தமிழக பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரை, துவக்கத்தில் இருந்தே பல குழப்பமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆன்லைன் கிளாஸ் நடத்தக்கூடாது; நடத்தலாம் என மாறிமாறி குழப்பி வருகிறது. அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம் மற்றொரு பக்கம் பெருங்குழப்பத்தில் நீடிக்கிறது. எனவே, தமிழக அரசு பள்ளிகள் திறப்பு, ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவது தொடர்பாக, தெளிவானதொரு அறிவிப்பை வெளியிட வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews