தமிழக அரசு, 'ஆன்லைன்' வாயிலாக நடத்தும், 'இன்ஜினியரிங் கவுன்சிலிங்' குறித்து, மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'உங்களால் முடியும்' என்ற நிகழ்ச்சி, குரோம்பேட்டையில், நேற்று நடந்தது.
இதில், ஏராளமான மாணவ -- மாணவியர், பெற்றோருடன் பங்கேற்று, கவுன்சிலிங் குறித்த, சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர, தமிழக அரசின், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்து உள்ளனர்.கவுன்சிலிங்கில் விருப்பப் பாடப்பிரிவுகளை, தேர்வு செய்வது குறித்து, மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், நம் நாளிதழ் சார்பில், 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து, குரோம்பேட்டை, நியூ காலனி, சி.எல்.சி., ஒர்க்ஸ் சாலையில் உள்ள, லட்சுமி ஆண்டாள் கல்யாண மண்டபத்தில், நேற்று காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை, இந்நிகழ்ச்சி நடந்தது.
இதில், பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அதிகாரி, டி.அழகர்சாமி, ஆன்லைன் கவுன்சிலிங் குறித்து, விளக்கம் அளித்தார்.பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது மற்றும் பாடப்பிரிவுகளின் சந்தேகங்களுக்கு, கல்வி ஆலோசகர், ஜெயபிரகாஷ் காந்தி, ஆலோசனை வழங்கினார்.நிகழ்ச்சியில், பங்கேற்ற மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தகவல் அடங்கிய, வழிகாட்டி கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும், 1,000 மாணவர்களுக்கு, இலவச, 'ரோபோடிக்ஸ் ஒர்க் ஷாப்'பில் பங்கேற்க வாய்ப்பும், 50 மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் பாடப்பிரிவிற்கு உதவித் தொகையும் வழங்கப்பட உள்ளன.எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எனத் தெரியாமல், குழப்பத்தில் இருந்தேன். இந்நிகழ்ச்சியின் வாயிலாக, ஆன்லைன் பாடப்பிரிவுகளையும், கல்லுாரிகளையும் தேர்வு செய்வது குறித்து, நல்ல தெளிவு கிடைத்தது. படிப்பது சம்பாதிப்பதற்கு தான். எனவே, வேலைவாய்ப்பு உள்ள பாடப்பிரிவை தேர்வு செய்ய முடிவு செய்தேன்.எஸ்.வர்ஷினி குரோம்பேட்டை.ஒவ்வொரு பாடப்பிரிவில் உள்ள, வேலை வாய்ப்புகள் குறித்து, விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
சுயமாக கற்றலின் முக்கியத்துவம் குறித்து, இங்கு வந்தபின், உணர்ந்தேன். அதேபோல், வாழ்வில் சாதிக்க, பாடத்திட்டங்களை தாண்டி, புதிதாக வரும் தொழில் நுட்பங்களின் வரவுகளை, அறிந்து கொள்ள வேண்டும் என, தெரிந்து கொண்டேன்.ஜே.ஸ்ரீமதி நெமிலிச்சேரி.ஆன்லைன் கவுன்சிலிங், கல்லுாரி தேர்வு மற்றும் பாடப்பிரிவுகளுக்கேற்ப வேலை வாய்ப்பு உட்பட, அனைத்திலும் இருந்த சந்தேகங்கள் தீர்ந்தன.
கல்லுாரிகளின் வெளிப்புற கட்டமைப்புகளை மட்டும், பார்த்து தேர்வு செய்யாமல், அங்கு, பாடப்பிரிவை தாண்டி, கற்றுக் கொடுக்கப்படும் புதிய விஷயங்களை மனதில் வைத்தே, கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும் என, தெளிவு பிறந்துள்ளது.ஆர்.நேத்ரா கிழக்கு தாம்பரம்.ஆன்லைன் கவுன்சிலிங்கின் அனைத்து நிலைகளையும், தெளிவாக அறிந்து கொண்டேன். இங்கு, வரும் முன், பெட்ரோலியம் சார்ந்த பாடப்பிரிவுகளை, படிக்கலாம் என, முடிவு செய்திருந்தேன். அந்த துறைக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் குறையும் என, ஜெயபிரகாஷ் எடுத்துரைத்தார். அதனால், 'மெக்கானிக்கல்' பாடப்பிரிவை எடுக்க முடிவு செய்துள்ளேன்.வி.நரசிம்மன் தாம்பரம் சானடோரியம்.நான், 10 ஆண்டுகளாக, 'தினமலர்' வாசகராக உள்ளேன்.
கல்வி சார்ந்த செய்திகளுக்கு, உங்கள் நாளிதழில், முக்கியத்துவம் கொடுப்பதாலேயே, தொடர்ந்து வாங்கி வருகிறேன். இந்நிகழ்ச்சியில், ஆன்லைன் கவுன்சிலிங் மட்டுமின்றி, மாணவர்கள் எதை செய்ய வேண்டும், பெற்றோர் எதை செய்ய வேண்டும் எனவும், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் எடுத்துரைத்தார். இது,மிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஆர்.தேவிகா மேற்கு தாம்பரம்.இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து, அழகர்சாமி வரிசைப்படி தெளிவாக விளக்கினார். அதிக மதிப்பெண் பெறுவதை விட, நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளில், பங்கேற்பதும், முக்கியம் என, தெரிந்து கொண்டேன். ஜெயபிரகாஷ் காந்தியின் பேச்சு, மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோருக்கும் வழிகாட்டுதலாக அமைந்தது.ஜி.சிவகுமார் நங்கநல்லுார்.ஆன்லைன் கவுன்சிலிங் என்றால், என்னவென்றே தெரியாமல் வந்த எங்களுக்கு, இந்நிகழ்ச்சி தெளிவான பாதையை காட்டியது.
பிற மொழிகளான, ஜப்பான், ஜெர்மன் மொழிகளை கற்பதன் அவசியம் குறித்து, தெரிந்து கொண்டேன். என் மகளை, பிற மொழிகள் பயில, பயிற்சி அளிக்க உள்ளேன்.வி.வெங்கடேஸ்வர ராவ்ஆதம்பாக்கம்.'‛ஹெட்போன்' பயன்படுத்த விடாதீர்கள்!கல்வி ஆலோசகர், ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது:எந்த படிப்பு படித்தாலும், தொழில்நுட்பம் குறித்து, தெரிந்திருக்க வேண்டும். பாடப்பிரிவுகளை தாண்டி, அறிவை வளர்த்துக் கொள்வோருக்கே, இனி வேலை கிடைக்கும்.
சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தாமல், புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள, மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.நான்காவது தொழில் புரட்சியால், நவீன தொழில்நுட்பங்களின் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், மனித உழைப்பில் செய்யப்பட்டு வந்த, பல தொழில்கள் அழிகின்றன.பெற்றோர், மொபைல் போன் கூட தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கித் தாருங்கள்; ஆனால், 'ஹெட்போன்' மட்டும் பயன்படுத்த விடாதீர்கள். காரணம், அவர்கள் பார்க்கக்கூடாதவற்றை பார்க்க வாய்ப்புள் அதிகம்.மற்றும் காது கேளாமை உள்ளிட்ட பிரச்னைகளும் வரலாம்
மாணவர்கள், கல்லுாரியில் படிக்கும்போதே, சுயமாக கற்றல் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். வரும் காலங்களில், அன்னிய மொழிகளான, ஜப்பான், ஜெர்மனி மொழிகளை கற்போருக்கு, அதிகம் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும். 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.இதற்கு, பொறியியல் படித்த மாணவர்களிடையே, போதிய திறமை இல்லாததே, காரணம்.கம்ப்யூட்டர் சயின்ஸ் பிசினஸ் சிஸ்டம், கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகியவை புதிய படிப்புகளாக வந்துள்ளன. இவற்றை, படித்தால் எதிர்காலத்தில் நல்லது.
அடுத்த ஆறு ஆண்டுகளில், பேட்டரியில் இயங்க கூடிய வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, அது சார்ந்த, தொழில்நுட்பங்களை கற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கவுன்சிலிங் கட்டணம்!நிகழ்ச்சியில், பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அதிகாரி, டி.அழகர்சாமி பேசியதாவது:அனைவரும் ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்திருப்பர். 1 முதல், 10 ஆயிரம் ரேங்க் வரை எடுத்த மாணவர்கள் முதலிலும், மற்றவர்கள் அடுத்தடுத்தும் அழைக்கப்படுவர்.கவுன்சிலிங் கட்டணமாக, பொதுப் பிரிவினருக்கு, 5,000 ரூபாயும், மற்றவர்கள், 1,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.
இதில், தேர்வு செய்யும் கல்லுாரி கட்டணத்தில் இருந்து, கவுன்சிலிங் கட்டணம் குறைக்கப்படும்; எந்த கல்லுாரியையும் தேர்வு செய்யாதோருக்கு, 80 சதவீதம் கட்டணம் திருப்பி தரப்படும்.கவுன்சிலிங்கிற்கு கொடுக்கப்படும் மொபைல் போன் எண்ணை, முடியும் வரை, மாணவர்கள் தங்கள் உடனேயே வைத்திருக்க வேண்டும்.எந்த கல்லுாரி நிர்வாகமும், உங்களை அழைத்து, பெயர் மற்றும் கடவுச் சொற்களை கேட்க மாட்டார்கள்.
ஒரு வேளை, கேட்டாலும் நீங்கள் கொடுக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் உள்ள, சந்தேகங்கள் குறித்து, கல்வி ஆலோசகர், ஜெயப்பிரகாஷ் காந்தி, இன்றும், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின், தலைவர், ஸ்ரீராம், 3ம் தேதியும், 'தினமலர்.காம்'ல் பேச உள்ளனர்.சந்தேகங்கள் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர், 95001 17711 என்ற, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- -நமது நிருபர் -
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U