Breaking

Tuesday, January 13, 2026

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: 11 ஆயிரத்தை தாண்டியது ஆப்சென்ட்; மாவட்டத்திலும் வீட்டுக்காவல் முடிவு



இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: 11 ஆயிரத்தை தாண்டியது ஆப்சென்ட்; மாவட்டத்திலும் வீட்டுக்காவல் முடிவு

தமிழகம் முழுவதும் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 18 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தொடக்க கல்வித்துறையில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று 'ஆப்சென்ட்' ஆகினர். இதனால் 90 சதவீதம் ஈராசிரியர் பள்ளிகள் முடங்கின. போராட்டத்தை முடக்கும் வகையில் மாவட்ட நிர்வாகிகளையும் வீட்டுக்காவலில் வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

தி.மு.க., 2021 தேர்தல் அறிக்கையில் அளித்த 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை நிறைவேற்ற கோரி டிச.,26 முதல் பணிமூப்பு இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) சென்னையிலும், மாவட்டங்களிலும் 18 வது நாளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கு நெருக்கடி போராட்ட ஆசிரியர்கள் சென்னையில் முன்னறிவிப்பின்றி தினம் ஒரு இடம் தேர்வு செய்து பல ஆயிரம் பேர் கூடுவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். கைது நடவடிக்கையில் கடுமை காட்டுவதால் ஆசிரியர் பலர் காயமடைவதாக சர்ச்சை எழுந்துள்ளது. போராட்டத்திற்கு பிற ஆசிரியர் சங்கங்களும், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, மார்க் கம்யூ., தே.மு.தி.க., உள்ளிட்ட அரசியல் கட்சி ஆதரவும் அதிகரித்து வருவதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை வழி நடத்தும் எஸ்.எஸ்.டி.ஏ., மாநில நிர்வாகிகளை வீட்டுக்காவலில் வைப்பது, ஓட்டலில் சாப்பிடச் செல்லும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனங்களில் ஏற்றி போராட்டத்தை முடக்கும் நடவடிக்கைகளில் அரசுக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது. அதேநேரம் தேனி மாவட்டம் டி.அணைக்கரைப்பட்டி அரசு கள்ளர் தொடக்க, தஞ்சை திருவையாறு ஒன்றியம் வானராங்குடி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் ஈராசிரியர் பள்ளிகள் என்பதால் அங்குள்ள மாணவர்களுக்கான கல்வி பாதிப்பதை கண்டித்து பெற்றோர் இப்போராட்டங்களை பெற்றோர் நடத்தியுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சென்னையில் மாநில நிர்வாகிகளை வீட்டுக்காவலில் வைத்தது போல், மாவட்டங்களில் நடக்கும் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் நிர்வாகிகளையும் வீட்டுக் காவலில் அடைக்க அரசு திட்டமிட்டுள்ளது. எஸ்.எஸ்.டி.ஏ., மதுரை மாவட்ட தலைவர் குமரேசன் கூறுகையில், மாணவர்கள் பாதிக்ககூடாது என்பதற்காக தான் அரையாண்டு தேர்வு விடுமுறையில் போராட்டத்தை தொடர்ந்தோம். அரசு அழைத்து பேசவில்லை. கொடுத்த வாக்குறுதியை கேட்கிறோம். குற்றவாளிகளை போல் அரசு நடத்துகிறது துரதிருஷ்டவசமானது என்றார்.


இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; வீட்டு காவலில் சங்க பொறுப்பாளர்கள்

'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு போராடும் இடைநிலை ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களை, நேற்று முன்தினம் கைது செய்து, இரவெல்லாம் போலீஸ் வாகனங்களில் அமரவைத்து அலைக்கழித்து, நேற்று மதியம் வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தனர்.

'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று 17வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கடும் கோபம்


அவர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என, தேர்தல் வாக்குறுதி அளித்த தி.மு.க., அரசு தற்போது மவுனம் காப்பது, ஆசிரியர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை, சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட, இடைநிலை ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர். மாலை வரை சமூகநலக்கூடத்தில் தங்க வைத்தனர்.

அதன்பின், கலைவாணர் அரங்கின் வெளியே போலீஸ் வாகனத்தில் அமர வைத்தனர். இரவு, 8:00 மணிக்கு மேல், தாம்பரம், கேளம்பாக்கம் என, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று ஆங்காங்கே காத்திருந்தனர். நள்ளிரவுக்கு மேல், தென்மாவட்டங்களுக்கு அழைத்து சென்றனர்.

ஒப்படைப்பு


நேற்று மதியம், சங்கத்தின் தலைவர் ரெக்ஸ் ஆனந்தை, மதுரை கூடல்புதுார்; செயலர் ராபர்ட்டை மதுரை எஸ்.எஸ்.காலனி; பொருளாளர் கண்ணனை, புதுக்கோட்டை மாவட்டம் நாகமலை; துணை பொதுச்செயலர் வேல்முருகனை, தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி; தேனி மாவட்ட பொருளாளர் மாசானத்தை, போடி நாயக்கனுார்.

துணைத்தலைவர் ஞானசேகரனை, திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி; கொடைக்கானல் வட்டார தலைவர் ரெங்கசாமியை, மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தனர்.

அவர்களை அந்த மாவட்ட போலீசார், அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். மேலும், அவர்கள் வெளியில் வராமல் இருக்க, ஒவ்வொருவர் வீட்டின் முன்னரும், இரண்டு போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

டி.ஜி.பி.,யிடம் பா.ஜ., புகார்


'ஜனநாயக ரீதியாக போராடும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்து, அவர்களை அடைத்து வைத்திருக்கும் இடத்தை, உறவினர்களுக்கு தெரிவிக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில் பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

டி.ஜி.பி., அலுவலகத்தில், தமிழக பா.ஜ., துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் அளித்துள்ள புகார் மனு:
ஜனநாயக ரீதியாக நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்த போலீசார், பல மணி நேரம் ஆன பின்னரும், அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது. அவர்களின் மொபைல் போன்கள் அணைத்து வைக்கப்பட்டன.

அவர்கள் என்னவாயினர் என்பதே உறவினர்களுக்கு தெரியவில்லை. ஆசிரியர்கள் கைது குறித்து, உரிய நேரத்தில் தகவல் தராதது, அவர்களை தொடர்பு கொள்ள அனுமதிக்காதது, அரசு இயந்திரத்தின் பொறுப்புணர்வை கேள்விக்கு உள்ளாக்குவதோடு, பொது மக்களிடம் தேவையற்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. காவல் துறை நிர்வாகம், இந்த புகாரை பொறுப்புடன் கவனித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog