ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரையை சேர்ந்த டாக்டர் பாபு அப்துல்லா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கான தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நடத்தப்படுகிறது. சமீபத்தில் நடந்த தேர்வில், மாநில பாடத்திட்டத்தின்கீழ் சிறப்பாக படித்த பல மாணவர்களின் வாய்ப்பு பறிபோயுள்ளது. பல மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள பெரும் சிரமப்பட்டுள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் சிறப்பாக தேர்வை எதிர்கொண்டுள்ளனர். இதை எதிர்கொள்ளும்விதமாக கேரளாவில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதனடிப்படையில் தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.ேக.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர், ''1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தரமான பாடத்தை வழங்கும் வகையில், பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முன்னாள் துணைவேந்தர் தலைமையில் உயர்மட்ட கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் தரப்பில் தங்களது பரிந்துரைகளை அந்த குழுவிற்கு தெரிவிக்கலாம்'' என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.