கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பம்: அவகாசம் ஜூன் 23-ம் தேதி வரை நீட்டிப்பு 16,000 apply for veterinary courses; deadline extended to June 23.
தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 16 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்கும் அவகாசம் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்புக்கு (பிவிஎஸ்சி - ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன.
இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 60 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இதில் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்களும், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.
ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், உணவு தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள இணைப்புக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. 3 பி.டெக். பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.
இந்நிலையில், பிவிஎஸ்சி - ஏ.ஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த மே 25-ம் தேதி தொடங்கியது. பிவிஎஸ்சி - ஏ.ஹெச். படிப்புக்கு 10,678 பேர், பி.டெக். படிப்புகளுக்கு 5,356 பேர் என மொத்தம் 16,034 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 23-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வெளிநாட்டினர். வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களது வாரிசுகள், அவர்களது நிதி ஆதரவு பெற்றவர்களுக்கு இந்த கெடு நீட்டிக்கப்படவில்லை. அவர்கள் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அனைத்து படிப்புகளுக்கும் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Tuesday, June 16, 2026
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பம்: அவகாசம் ஜூன் 23-ம் தேதி வரை நீட்டிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.