Breaking

Saturday, September 14, 2024

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்.. அமைச்சர் அன்பில் மகேஷிடம் கோரிக்கை மனு!



பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்.. அமைச்சர் அன்பில் மகேஷிடம் கோரிக்கை மனு!

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் சங்கங்களை கோரிக்கை மனு கொடுத்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அனைத்து சங்கங்களின் கோரிக்கையை கொடுத்து பரிந்துரை செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நம்பிக்கை தெரிவித்தார். இதில் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் மாநில நிர்வாகிகள் தண்டபாணி, சித்ரா, கீதா, காயத்திரி, பாண்டியன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றி 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 13 ஆண்டுகளாக தற்போது ரூபாய் 12,500 தொகுப்பூதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி உள்ளிட்ட பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.

இந்த 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட அவர்களின் வேலையை முறைப்படுத்தி காலமுறை சம்பளம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. விரைவில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181இல் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக சொன்னதை நம்பி, 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்த்து விடியல் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நான்காவது ஆண்டில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்து கொண்டுள்ளார்.

திமுக தலைவராக தாம் கொடுத்த இந்த பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் நிறைவேற்ற ஆணையிட வேண்டும் எனவும், அமைச்சரவையைக் கூட்டி அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் நியமித்த உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் உள்ளிட்ட பாடங்களை நடத்தும் பகுதி நேர ஆசிரியர்கள் தற்போது வழங்கப்படும் 12,500 ரூபாய் என்ற சொற்ப சம்பளத்தோடு 14 கல்வியாண்டுகளாக தற்காலிகப் பணியில்தான் உள்ளனர். தற்காலிகமாக பணிபுரிவதை காலிப் பணியிடங்களாக்கி அவற்றை நிரந்தரப் படுத்தவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog