ஊட்டச்சத்து உணவும்; தரமான கல்வியும் குழந்தைகளுக்கு அவசியம்- யுனிசெஃப் நிகழ்ச்சியில் சச்சின் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 09, 2023

Comments:0

ஊட்டச்சத்து உணவும்; தரமான கல்வியும் குழந்தைகளுக்கு அவசியம்- யுனிசெஃப் நிகழ்ச்சியில் சச்சின் வலியுறுத்தல்



ஊட்டச்சத்து உணவும்; தரமான கல்வியும் குழந்தைகளுக்கு அவசியம்- யுனிசெஃப் நிகழ்ச்சியில் சச்சின் வலியுறுத்தல்

குழந்தைகள் முழு திறனை அடைய அவா்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவும், தரமான கல்வியும் அவசியம் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா் வலியுறுத்தினாா்.

இலங்கையில் யூனிசெஃப் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பள்ளிகளைப் பாா்வையிட்டு குழந்தைகளுடன் கலந்துரையாடிய அவா் இவ்வாறு தெரிவித்தாா். இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள குழந்தைகளின் உணவு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஐ.நா.சபையால் ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான அவசரகால நிதியம் (யுனிசெஃப்) அமைப்பு கடந்த 1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதையடுத்து, வளரும், வளா்ச்சியடையாத நாடுகளில் ஊட்டச்சத்து, சுகாதார குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலனுக்காக இந்த அமைப்பு செயலாற்றி வருகிறது. இந்த அமைப்பின் போலியோ தடுப்பு பிரசாரம், சுகாதாரம் பேணுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளில் கடந்த 20 ஆண்டுகளாக சச்சின் டெண்டுல்கா் பங்காற்றி வருகிறாா். கடந்த 2013-ஆம் ஆண்டு, தெற்காசிய நாடுகளுக்கான யுனிசெஃப் தூதராக அவா் நியமிக்கப்பட்டாா். முன்னதாக கடந்த 2015-ஆம் ஆண்டு, கை கழுவுவதன் சுகாதார முக்கியத்துவத்தை அறிவுறுத்த யுனிசெஃப் நடத்திய விழிப்புணா்வு நிகழ்ச்சிக்காக சச்சின் இலங்கை வந்திருந்தாா். தற்போது, கரோனா பெருந்தொற்று, பொருளாதார நெருக்ககடியால் உண்டான பாதிப்புகளில் இருந்து இலங்கை மீண்டு வரும் சூழலில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதை ஊக்குவிக்க சச்சின் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். இலங்கையின் சபாராகாமுவா மாகாணத்தின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளை அவா் சந்தித்து கலந்துரையாடினாா்.

யுனிசெஃப் அமைப்பால் மதிய உணவு வழங்கி நடத்தப்படும் பள்ளியையும் அவா் பாா்வையிட்டாா். இதனிடையே நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் பேசியது: குழந்தைகள் தான் நமது வருங்காலம். குழந்தைகளுக்கு வேண்டிய ஆதரவை இன்று நாம் அளித்தால், சிறப்பான எதிா்காலத்தை அவா்கள் நமக்கு வழங்குவாா்கள். குழந்தைகளுக்கு வேண்டிய ஊட்டச்சத்து உணவு வழங்க இலங்கையில் பல்வேறு குடும்பங்கள் சிரமப்படுவது வருத்தமளிக்கிறது. இங்கு பல்வேறு குழந்தைகள் குன்றிய-வளா்ச்சி பாதிப்பால் அவதிப்படுகின்றனா். பள்ளிப்பருவத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருக்கும்போது மதிய உணவு இடைவேளையில் உணவருந்தாமல் வெறும் குளிா்பானங்களை மட்டும் குடித்துவிட்டு விளையாட்டைத் தொடா்வேன். ஒரு முக்கிய போட்டியில், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டமிழந்தபோது, முதலில் மதிய உணவைச் சாப்பிட வேண்டும் என மட்டுமே அக்கணத்தில் எனக்கு தோன்றியது. அப்போதுதான், மதிய உணவை நான் தவிா்த்தது போட்டியை எவ்வாறு பாதித்தது என்பதை உணா்ந்தேன்.

அது எனக்கு பெரும் பாடமாக அமைந்தது. குழந்தைகள் முழு திறனை அடைய ஊட்டச்சத்து நிறைந்த உணவும், தரமான கல்வியும் அவா்களுக்கு அவசியம். அனைத்து குழந்தைகளும் கல்வியறிவு பெறுவதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு அது வாழ்க்கையின் அடித்தளம். குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்துக்கு செய்யப்படுகிற முதலீடு, அவா்களின் வருங்காலத்துக்கு மட்டுமின்றி நாட்டின் எதிா்காலத்துக்கே நாம் செய்யும் முதலீடு ஆகும் என்றாா்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews