Breaking

Friday, July 02, 2021

கற்பித்தலில் கூட்டு முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி: தேசிய விருதுக்குத் தேர்வான அரசுப்பள்ளி ஆசிரியர் பேட்டி

கற்பித்தல் பணியில் புதிய முயற்சி மேற்கொண்டதில் கூட்டு முயற்சியின் விளைவாகவே ஐசிடி விருது கிடைத்துள்ளதாக உடுமலைப் அரசு பள்ளி ஆசிரியர் தயானந்த் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உடுமலை அரசு ஆண்கள் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கே.பி.தயானந்த் (32). இவரது சொந்த ஊர் கோவை, சுந்தராபுரம். கடந்த 2012-ல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெற்றி பெற்ற இவர் சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகத் தனது கல்விப் பணியைத் தொடங்கினார்.

2017-ம் ஆண்டு முதல் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றிய 3 ஆண்டுகளிலும் ஆங்கிலப் பாடத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கற்பித்தலில் நவீன தொழில்நுட்பத்தை இவர் பயன்படுத்தியதுதான் அதற்குக் காரணம் என்கின்றனர். இதற்காகவே மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் இவருக்கு 2018-ம் ஆண்டுக்கான ஐசிடி விருது வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கே.பி.தயானந்த் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறும்போது, ''நான் எம்.ஏ., பிஎட் ஆங்கிலப் பட்டதாரி. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்துகிறேன். கற்பித்தலில் புரொஜெக்டர்களைப் பயன்படுத்தி பாடம் நடத்துவது, ஸ்கைப் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் அரசுப் பள்ளி மாணவர்களை உரையாடச் செய்தது, ஆசியர்களைக் குழுவாக இணைத்து பாடங்களை அனிமேஷன் வீடியோக்களாக உருவாக்கியது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டேன். இவ்வாறு 170 வீடியோக்களை உருவாக்கியுள்ளோம்.

இந்த விருதைக் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன். இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும்'' என்று ஆசிரியர் கே.பி.தயானந்த் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog