Join Telegram
திருச்சியில் மாணவர்களுக்கு பன்னீர் தெளித்து, சந்தனம் அளித்து வரவேற்பு: 506 பள்ளிகள் திறப்பு!
திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 506 பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு அரசு அறிவிப்பின்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன.
இதற்காக அனைத்துப் பள்ளிகளும் நேற்று சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டது.
10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் அரசு வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை திருச்சி மண்டல கண்காணிப்பு அலுவலரும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருமான நிர்மல்ராஜ் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழு அனைத்து பள்ளிகளையும் நேற்றும் இன்றும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
விருப்பப்படும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம். அவர்களும் பெற்றோர்கள் விருப்ப கடிதத்துடன் வரவேண்டும். வருகைப்பதிவு கட்டாயமில்லை. ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். இவை அனைத்தும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் சுய விருப்பத்துடன் பள்ளிக்கு வருவதை இன்று காண முடிந்தது.
தற்போது பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு ஜிங், விட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு முகக் கவசம் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளி சார்பில் முகக்கவசம் வழங்கப்படுகிறது.
அதேபோல ஒவ்வொரு வகுப்புக்கும் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சமூக இடைவெளி அதாவது 6 அடி இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது.
பள்ளிக்கு வரும் மாணவிகள் மகிழ்ச்சியுடன் வருகின்றனர். 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவதால் ஒரு வித பரவசத்துடன் வருவதை காண முடிகிறது. அவர்களுக்கு பன்னீர் தெளித்து, சந்தனம், இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்று வகுப்புகளுக்கு அனுப்புவதை காணமுடிந்தது.
மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, January 19, 2021
பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு பன்னீர் தெளித்து, சந்தனம் அளித்து வரவேற்பு
STUDENTS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.