மருத்துவ கவுன்சிலிங்:விண்ணப்பம் பதிவு துவங்கியது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 04, 2020

Comments:0

மருத்துவ கவுன்சிலிங்:விண்ணப்பம் பதிவு துவங்கியது!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 4,981 எம்.பி.பி.எஸ்., - 1,760 பி.டி.எஸ்., இடங்களில், மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான தர வரிசை பட்டியில், 16ம் தேதி வெளியிடப்படுகிறது. கவுன்சிலிங்கின் துவக்கத்திலேயே, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ள, மருத்துவ கல்வி இயக்குனரகம், கொரோனா பரவல் தடுப்புக்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருந்ததால், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை, மருத்துவ கல்வி இயக்குனரகம் துவக்கி உள்ளது. இடங்கள் எவ்வளவு?
*தமிழகத்தில், 23 அரசு மருத்துவ கல்லுாரிகளில், 3,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அதில், 516 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. மீதமுள்ள, 2,784 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும். *சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், 100 இடங்கள் உள்ளன. இவற்றில், 35 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், 65 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு உள்ளன. *சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியில், 150 இடங்கள் உள்ளன. அவற்றில், 23 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், 127 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கும் கிடைக்கும் . *ஈரோடு பெருந்துறை மருத்துவ கல்லுாரியில் உள்ள, 100 இடங்களில், 45 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், 55 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கும் கிடைக்கும். *இதுதவிர, 14 தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 1,950 எம்.பி.பி.எஸ்., இடங்களில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 1,057 இடங்கள் வருகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 893 இடங்கள் உள்ளன. அதன்படி, தமிழக அரசு ஒதுக்கீட்டில் மொத்தம், 4,088 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.

பல் மருத்துவம்
*சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரியில் உள்ள, 100 பி.டி.எஸ்., இடங்களில், 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 85 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலும் உள்ளன . *18 தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 1,760 பி.டி.எஸ்., இடங்களில், 1,070 அரசு ஒதுக்கீட்டுக்கும், 690 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் கிடைக்கும். விண்ணப்ப பதிவு துவக்கம்
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் விண்ணப்பிக்கும் வசதி, நேற்று முதல் துவங்கியுள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:
மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், 'நீட்' தேர்வு மதிப்பெண், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், இருப்பிட சான்று மற்றும் ஆதார் உள்ளிட்ட, 18 சான்றிதழ்களின் நகல்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். அரசு இட ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு, தனித்தனியாக ஆன்லைன் வழியாக, விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவுகளில் சிறப்பு பிரிவினர், ஆன்லைன் வாயிலாகவும், 'செயலர், மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை இயக்குனரகம், 162, பெரியார் இ.வி.ஆர்., நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -- 10' என்ற முகவரிக்கு, தபால் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 12ம் தேதி மாலை, 5:00 மணிக்குகள் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல், 16ம் தேதி வெளியிடப்படும். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட, அடுத்த சில நாட்களில், சிறப்பு பிரிவினருக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். அதன்பின், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்கும். மருத்துவ மாணவர் சேர்க்கை, டிசம்பர், 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள், டிசம்பர், 15ம் தேதி துவங்கும். இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தாண்டு, கொரோனா தொற்று காரணமாக, ஆன்லைன் வாயிலாக, மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, எதிர்பார்த்த நிலையில், வழக்கம் போல, நேரடி கவுன்சிலிங் தான் என, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். மாணவர் சேர்க்கையின் போது, மாணவர்கள், அவர்களின் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளையும், மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அந்த வழிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, தகவல் தொகுப்பேட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்கள், சான்றிதழ் நகல்கள் குறித்து எழும் சந்தேகங்கள் குறித்து, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.மேலும், 044 -- 2836 4822, 98842 24648, 98842 24649, 98842 24745, 98842 24746 என்ற, எண்களில் தொடர்பு கொண்டும் தகவல்களை பெறலாம் என, மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்புக்கான வழிமுறைகள் என்ன?
* கவுன்சிலிங் நடைபெறும் வளாகத்தில், மாணவர், அவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் என, ஒருவர் மட்டுமே உடன் அனுமதிக்கப்படுவார் * வளாகத்தில் நுழையும் போது, அனைவரும், ரத்த ஆக்சிஜன் அளவு, வெப்பநிலை பரிசோதனையை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். வளாகத்தில், 6 மீட்டர் இடைவெளி விட்டு, அமரவும், நிற்கவும் வேண்டும். * முகக்கவசம் அணிவதுடன், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் சானிடைசர் பயன்படுத்தி கழுவ வேண்டும். * வளாகத்திற்குள் எச்சில் துப்ப தடை விதிக்கப்படுகிறது. இருமல், தும்மலின் போது, வாய் மற்றும் மூக்குப்பகுதி மூடியபடி இருக்க வேண்டும். * உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், முன்கூட்டியே, மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு தெரிவிக்க வேண்டும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews