25,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 25,000 teachers dismissed; Supreme Court takes drastic decision
ஆசிரியர் நியமனத் தேர்வு
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு 2016ம் ஆண்டு பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர்களைத் தேர்வு நடத்தித் தேர்ந்தெடுத்து பணியில் நியமித்தது.
ஆசிரியர் நியமனத் தேர்வுக்காக நடத்தப்பட்ட தேர்வில் 23 லட்சம் பேர் பங்கேற்றனர். பணியிடங்கள் மொத்தம் 24,640 என்ற எண்ணிக்கையிலிருந்தது.
ஆனால், 25753 பேருக்குப் பணி ஆர்டர் உத்தரவுகள் வழங்கப்பட்டன. தரப்பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கும் பணி நியமன உத்தரவு கடிதம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ஆசிரியர் நியமனத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உயர் நீதிமன்றம் உத்தரவு
அம்மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் இம்முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது. அதோடு 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
அமலாக்கப் பிரிவும் இம்முறைகேடு குறித்து விசாரித்தது. இதைத்தொடர்ந்து மம்தா பானர்ஜி அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி உட்படப் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மம்தா பானர்ஜி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்து உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தனர்.
ஒட்டுமொத்த ஆசிரியர் தேர்வில் மோசடி நடந்துள்ளது. ஆசிரியர் தேர்வு நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாநில அரசு அடுத்த 3 மாதத்திற்குள் புதிதாகத் தேர்வு நடத்தி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், அதில் தேர்ச்சி அடையும் 2016ல் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் இது வரை வாங்கிய சம்பளத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தேர்ச்சி பெறாதவர்கள் இதுவரை வாங்கிய சம்பளத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் மட்டும்
2016ம் ஆண்டு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மட்டும் பணியில் தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் 25,000 ஆசிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மம்தா பானர்ஜி அரசை நசுக்கி இருப்பதாகவும், லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை மம்தா பானர்ஜி அரசு சீரழித்து இருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.