Breaking

Monday, June 07, 2021

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் - பெற்றோர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீட்டு முறைகளை அரசு விரைவாக வெளியிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்க மதிப்பெண் தேவைப்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பெண் மதிப்பீட்டு முறைகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் நேரடி வகுப்புகளும், தேர்வுகளும் நடைபெறாமல் உள்ளது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவுவதால் பள்ளிகள் திறப்பு பற்றி எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. நேரடி தேர்வு நடை பெற்றால் மாணவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதால் மத்திய அரசு சி.பி.எஸ்.சி 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. இதனை தொடர்ந்து பல மாநிலங்கள் பொதுத்தேர்வை ரத்து செய்தன. தமிழகத்தில் 1 முதல் 11 ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் 12 ம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்துவது பற்றி பள்ளிக்கல்வித்துறை பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தியது பிறகு பெற்றோர், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களிடம் கருத்து கேட்டறிந்த பின்பு தமிழக முதல்வர் பொதுத்தேர்வை ரத்து செய்தார். 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கும் மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு என எந்தவித தேர்வும் நடைபெறவில்லை. இதனால் எந்த முறையில் மதிப்பெண் மதிப்பீடு இருக்கும் என தெரியவில்லை. மதிப்பெண்கள் வழங்குவதில் சற்று குழப்பம் நீடிக்கிறது. எனவே மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது பற்றி எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படாமல் உள்ளது. அரசு விரைந்து தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீட்டு முறைகளை தீர்மானித்து அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாணவர்களை பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்க மதிப்பெண் தேவைப்படுகிறது எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog