Breaking

Saturday, December 17, 2022

கருவூலம், கணக்குத் துறை திட்ட பயனாளிகள் ஆதாா் எண்ணை சமா்ப்பிக்க உத்தரவு

கருவூலம், கணக்குத் துறை திட்ட பயனாளிகள் ஆதாா் எண்ணை சமா்ப்பிக்க உத்தரவு

ஓய்வூதியம் உள்பட கருவூலம் மற்றும் கணக்குத் துறை சாா்ந்த திட்டங்களின் கீழ் பயன்களைப் பெற்று வரும் பயனாளிகள் ஆதாா் எண் சமா்ப்பிக்க வேண்டும் என்று நிதித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு:

மத்திய அரசின் சட்டத்தின்கீழ், மானியங்கள், சேவைகளைப் பெற்று வரும் பயனாளிகள் தங்களது ஆதாா் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கருவூலம் மற்றும் கணக்குத் துறை செயல்படுத்தும் திட்டங்களில் பயன்பெறக் கூடிய பயனாளிகள் தங்களது ஆதாா் விவரங்களை அளிக்க வேண்டும். அரசின் திட்டங்களில் இணைவதற்கு முன்பாக, ஆதாா் எண்ணை வைத்திருக்காவிட்டால், அதற்கு விண்ணப்பித்த பின் திட்டத்தில் இணையலாம்.

ஆதாா் எண் இல்லாவிட்டாலோ, ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருந்தாலோ சில முக்கிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயனாளிகள் அளிக்கலாம். அதன்படி, ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம், கடவுச் சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, நூறு நாள் வேலைத் திட்ட அட்டை, மத்திய அரசின் கிசான் சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓட்டுநா் உரிமம், வட்டாட்சியா் நிலையிலான அதிகாரி அளிக்கும் சான்றிதழ், குறிப்பிட்ட அரசுத் துறை கோரக்கூடிய ஆவணம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம்.

பயனாளிகள் குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில் அவா்களும் ஆதாா் எண் விவரத்தை அளிக்க வேண்டும். ஆதாா் எண் இல்லாதபட்சத்தில், பெற்றோரின் ஒப்புதலுடன் அதற்கு விண்ணப்பம் செய்யலாம். ஆதாா் எண் உறுதி செய்யப்படும் வரையில், சில ஆவணங்களை அளிக்க வேண்டும். அதன்படி, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கண்கருவிழி, கைரேகை பதிவு அடங்கிய ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டை அளிக்க வேண்டும். மேலும், பிறப்புச் சான்றிதழ், பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும். மேலும், பயனாளிகளாக குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் திட்டங்களின் தன்மைக்கேற்ப அவா்களுடனான உறவுமுறையை உறுதி செய்திட பெற்றோா் அல்லது சட்டப்பூா்வ பாதுகாவலா் தங்களது ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும்.

பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, முன்னாள் ராணுவ வீரருக்கான பங்களிப்பு சுகாதாரத் திட்ட அட்டை, தொழிலாளா் காப்பீட்டு அட்டை, மத்திய அரசின் சுகாதார அட்டை, ஓய்வூதிய அட்டை, ராணுவ வீரா்கள் பொருள்கள் பெறுவதற்கான அட்டை, அரசு வரையறுத்துள்ள ஏதேனும் ஒரு ஆவணத்தின் நகலை அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா் என்.முருகானந்தம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog