Breaking

Friday, December 16, 2022

மாநில புதிய கல்விக் கொள்கை ஆய்வறிக்கை முதல்வரிடம் ஜனவரி மாதம் வழங்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

மாநில புதிய கல்விக் கொள்கை ஆய்வறிக்கை முதல்வரிடம் ஜனவரி மாதம் வழங்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

மாநிலத்தின் புதிய கல்வி கொள்கை குறித்த ஆய்வு அறிக்கை வரும் ஜனவரி மாதம் முதல்வரிடம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை கல்லூரியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடர்பான தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய கல்விக்கொள்கை குறித்த ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்துள்ளது. தற்போது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற, துறை சார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. டிசம்பரில் இது முடிவடையும் என்று அவர் கூறியுள்ளார். ஜனவரியில் முதல்வரிடம் இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு முதல்வர் அறிக்கையை ஆய்வுசெய்து, ஆணை வெளியிடுவார்.

நடப்பாண்டு தமிழகம் முழுவதும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 4.8 லட்சம் பேருக்கு எழுத்தறிவு கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில் ஈரோடு மாவட்டத்தின் ரூ. 23,598 இலக்காகும். கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு திட்டம் பயன்தந்துள்ளது. இலக்கை விஞ்சி 5 லட்சம் பேர் வரை இத்திட்டத்தில் பயனடைவார்கள். அமைச்சர் முத்துசாமி கூறியது போல், தமிழகத்தில் ஒருவர் கூட கல்லாதவர் இல்லை என்ற நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் 24 வகையான விளையாட்டில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. புதிதாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார். அத்துறையுடன் இணைந்து மேலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் கூறினார்.

பள்ளிகளில் குழந்தைகள் கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்று முதல்வர் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில் கூட போதை பொருள் இல்லா மாநிலத்தை உருவாக்குவதை அவர் வலியுறுத்தியுள்ளார். எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது, எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog