தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட கலெக்டர் அலுவலகத்தில் மனு.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 05, 2022

Comments:0

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட கலெக்டர் அலுவலகத்தில் மனு..

பள்ளிக் கல்வித்துறையின் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட வேண்டும் என்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியானவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. இதில், கடந்த 2013, 2014, 2017, 2019-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, கடந்த 2013-ம் ஆண்டு முதல் இன்று வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், நிரந்தர பணி வேண்டி காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகம் முன் கடந்த 3 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தின் முடிவில், எங்கள் குழு சார்பாக முதல்வரின் தனிச்செயலர் இடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை வைத்தோம். பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். இந்த நிலையில், ஐகோர்ட் மதுரைக் கிளையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பள்ளிக் கல்வித் துறையால் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கோரியும், நியமிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால், 30 ஆயிரம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட வேண்டும்.

கடந்த 9 ஆண்டுகளாக உரிய பணியின்றி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு நிரந்தர ஆசிரியர் பணி வழங்க அரசுக்கு பரிந்துரை அறிக்கை அனுப்ப வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews