Breaking

Thursday, July 14, 2022

இணையதளத்தில் பழசு; பள்ளியில் புதுசு.. புத்தக குழப்பத்தில் இது புது தினுசு

பள்ளிக் கல்வி துறை இணையதளத்தில், திருத்தப்படாத பழைய பாடப் புத்தகமும், வகுப்பறையில் படிக்கும் மாணவர்களிடம் திருத்தப்பட்ட புதிய பாடப்புத்தகமும் புழக்கத்தில் இருப்பதால், ஆசிரியர்களும், பெற்றோரும் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு களுக்கு, 2018 முதல் புதிய பாடத் திட்டம் அமலில் உள்ளது.அதில், நான்கு ஆண்டுகளாக எவ்வித திருத்தமும் செய்யப்படவில்லை.

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், பாடப் புத்தகங்களில் திருத்தம் செய்ய, குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப, புத்தகங்களில் சில திருத்தங்கள் செய்ய, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,க்கு பரிந்துரைத்தனர்.

அதன்படி, பாடங்களில் திருத்தம் செய்யப்பட்டு, புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன.இந்த புதிய புத்தகங்கள், தமிழகம் முழுதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன. பாடநுால் கழக மையங்களிலும் விற்கப்படுகின்றன. இந்நிலையில், திருத்தப்பட்ட பாடப் புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டாலும், தமிழக அரசின், tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. அதனால், 'ஆன்லைனில்' பதிவிறக்கம் செய்யும் புத்தகங்களுக்கும், மாணவர்களிடம் உள்ள புத்தகங்களுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இதனால், பாடம் நடத்துவது மற்றும் பாடக் குறிப்பு எழுதுவதில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

எனவே, அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுத்து, இணையதளத்தில் உள்ள பழைய புத்தகங்களை நீக்கி விட்டு, புதிய திருத்தப்பட்ட புத்தகங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog