Breaking

Sunday, September 19, 2021

பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் கரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர்

திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் கரோனா நோய்த்தொற்று குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கரோனா சிறப்பு முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், மு.பெ.சாமிநாதன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்குடன் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.


திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 18 வயது பூர்த்தியானவர்களுக்கு 13 லட்சத்து 86 ஆயிரத்து 891 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 2 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் 67 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், இரண்டாவது தவணை தடுப்பூசி 13 சதவீதம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


கடந்த வாரம் நடந்த முகாமில் 28 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரையில் 56 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அளவில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட தொற்று எவ்வித பாதிப்பும் இல்லாத தொற்று என்பதால் அச்சப்படத்தேவையில்லை.


மேலும், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரும் நேரத்தில் அவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்த கூடாது. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு செலுத்த தடுப்பூசிதான் இல்லை. ஆகவே, மத்திய அரசு போதுமான அளவு தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


இந்த ஆய்வின்போது, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog