Breaking

Saturday, August 01, 2026

கல்வித்துறையில் மாபெரும் அவலம்: நாடு முழுவதும் 1,00,843 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் தான்!


கல்வித்துறையில் மாபெரும் அவலம்: நாடு முழுவதும் 1,00,843 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் தான்!

புதுடெல்லி: இந்தியாவில் கல்வித்துறையை நவீனமயமாக்கவும் உலக நாடுகளுக்கு இணையான உள்கட்டமைப்பை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், நாட்டின் அடிப்படைப் பள்ளிக் கல்வியில் பெரும் தொய்வு நிலவுவதை சுட்டிக்காட்டும் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் வெறும் ஒரேயொரு ஆசிரியரைக் கொண்டு மட்டுமே இயங்கி வருகின்றன என்ற தகவலை மத்திய கல்வி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் வெளியான அதிகாரப்பூர்வ தரவு


நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்ணியிடங்கள் மற்றும் ஆசிரியர்-மாணவர் விகிதம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குக் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, பள்ளி கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE+) வெளியிட்ட விரிவான தரவுகளை தாக்கல் செய்தார்.

முக்கியத் தரவு: UDISE+ வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் மொத்தம் 1,00,843 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் மட்டுமே இயங்கி வருகின்றன. இதில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளும் அடங்கும்.

ஆந்திரா முதலிடம்: மாநில வாரியான ஒற்றை ஆசிரியர் பள்ளிகள்

ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கும் பள்ளிகளின் பட்டியலில் தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திராவில் மட்டும் 16,357 பள்ளிகள் ஒற்றை ஆசிரியருடன் இயங்குகின்றன. இது நாட்டின் மொத்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் 16 சதவீதமாகும்.

நாட்டில் உள்ள மொத்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் சுமார் 65 சதவீதப் பள்ளிகள் வெறும் 7 மாநிலங்களில் மட்டுமே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது:

மாநிலம் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை
ஆந்திரப் பிரதேசம் 16,357
ஜார்க்கண்ட் 9,827
மகாராஷ்டிரம் 9,269
கர்நாடகம் 8,042
உத்தரப் பிரதேசம் 7,874
ராஜஸ்தான் 7,200
மேற்கு வங்கம் 6,769

தென்னக மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களின் நிலை

  • தெலங்கானா: 4,793 பள்ளிகள்
  • தமிழ்நாடு: 3,957 பள்ளிகள்
  • அசாம்: 3,159 பள்ளிகள்
  • ஹிமாச்சலப் பிரதேசம்: 3,128 பள்ளிகள்
  • உத்தரகண்ட்: 2,655 பள்ளிகள்
  • சத்தீஸ்கர்: 2,461 பள்ளிகள்

குறைந்த அளவில் ஒற்றை ஆசிரியர் கொண்ட பகுதிகள்


மாறாக, கேரளாவில் 67 பள்ளிகளும், நாகாலாந்தில் 35, சிக்கிமில் 31, லடாக்கில் 28, தலைநகர் டெல்லியில் 7 மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஒரே ஒரு பள்ளி மட்டுமே ஒற்றை ஆசிரியருடன் இயங்குவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

தேசிய கல்விக் கொள்கை (NEP) நிர்ணயித்த விகிதம் என்ன?

தேசிய கல்விக் கொள்கையின்படி ஆசிரியர் - மாணவர்கள் இடையேயான விகிதம் (Pupil-Teacher Ratio) பின்வருமாறு இருக்க வேண்டும்:

  • தொடக்கப் பள்ளிகள் (Primary): 19 மாணவர்களுக்கு 1 ஆசிரியர்
  • மேல்நிலைப் பள்ளிகள் (Preparatory/Middle): 17 மாணவர்களுக்கு 1 ஆசிரியர்
  • உயர்நிலைப் பள்ளிகள் (Secondary): 23 மாணவர்களுக்கு 1 ஆசிரியர்

தேசிய அளவில் ஒட்டுமொத்த ஆசிரியர்-மாணவர் விகிதம் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருந்தாலும், குறிப்பிட்ட பள்ளிகளில் ஒற்றை ஆசிரியர் மட்டுமே இருப்பது மாணவர்களின் கற்றல் திறனைப் பாதிக்கும் என சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

எழும் முக்கிய வினாக்கள்


ஒரு பள்ளிக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கும் போது, அவர் கற்பித்தல் பணியுடன் சேர்த்து நிர்வாகப் பணிகள், மதிய உணவு மேற்பார்வை, தேர்தல் பணிகள் போன்ற பிற பணிகளையும் கவனிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog