Breaking

Thursday, September 23, 2021

வருமான வரி ரீபண்டு பெயரில் திருடப்படும் வங்கி விபரங்கள்

'வருமான வரி 'ரீபண்டு' என்ற பெயரில் அலைபேசி செய்தி அனுப்பி வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்டவை திருடப்படுகிறது' என சைபர் குற்றங்களை தடுக்கும் 'செர்ட்இன்' அமைப்பு எச்சரித்துள்ளது.


சைபர் குற்றங்களை தடுக்கவும் கண்காணிக்கவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது செர்ட்இன் என்ற அமைப்பு. சைபர் மோசடிகள் குறித்து இந்த அமைப்பு எச்சரிக்கை விடுக்கும். அதன்படி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்களை திருடும் இணையத் திருடர்கள் தற்போது புதிய வழியை பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட நபரின் அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அதில் வருமான வரி 'ரீபண்டு' செய்யப்படுவதாகக் கூறப்படும். அந்த செய்தியில் குறிப்பிட்ட இணையதள இணைப்புக்குள் நுழையும்படி கூறுவர்.அவ்வாறு நுழையும்போது புதிதாக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்படி கூறுவர். வருமான வரித் துறையின் இணையதளம் போலவே இந்த இணைய தளமும் செயலியும் இருக்கும்.அதில் பான்கார்டு எண் வங்கி கணக்கு எண் உள்பட தகவல்களை பதிவிடும்படி கூறுவர். அவ்வாறு பதிவு செய்ததும் அந்தத் தகவல்களை இணையத் திருடர்கள் திருடி விடுவர்.


அந்தத் தகவல்கள் வைத்து பயனாளியின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடுவர்.நாடு முழுதும் 27 பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் இந்த மோசடி ஏற்கனவே துவங்கிவிட்டது. அதனால் இதுபோன்ற செய்தி வரும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செய்தியுடன் இடம்பெறும் இணையதள இணைப்புகளை எப்போதும் பயன்படுத்தக் கூடாது. இதுவே மோசடிகளை தடுக்க உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog