Breaking

Sunday, August 15, 2021

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – ஆகஸ்ட் 17ம் தேதி ஆலோசனை!

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டது. ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பொதுத்தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கு மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் என தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து உள்ளது.

மேலும் சில மாநிலங்களில் கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதற்கட்டமாக நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு வருகிற செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணியில் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையில் வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி சென்னையில் மாவட்ட கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக கருத்து கேட்பு, பள்ளிக்கல்வித்துறை திட்ட அறிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog