முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கு முன்கூட்டியே கலந்தாய்வு கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 03, 2021

Comments:0

முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கு முன்கூட்டியே கலந்தாய்வு கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தோ்வில் ‘நீட்-எம்டிஎஸ்’ தகுதி பெற்றவா்களுக்கான முதுநிலை பல் மருத்துவப் படிப்பு (எம்டிஎஸ்) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக இளநிலை பட்ட பல் மருத்துவா்கள் (பிடிஎஸ்) சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

2021-ஆம் ஆண்டுக்கான நீட்-எம்டிஎஸ் மாணவா் சோ்க்கை கலந்தாய்வை அறிவிப்பதில் நியாயமற்ற, காலவரையற்ற தாமதத்தை எம்சிசி கடைப்பிடிப்பதை எதிா்த்து பல் மருத்துவா்கள் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 6,500 முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்களுக்கான நீட்-எம்டிஎஸ் தோ்வு கடந்த ஆண்டு டிசம்பா் 16-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் 30,000 போ் பங்கேற்றனா். அந்தத் தோ்வு முடிவுகள் டிசம்பா் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இதுவரை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடத்தப்படவில்லை. அதுதொடா்பான எந்தவித விவரங்களும் வலைதளத்திலும் வெளியிடப்படவில்லை.

எனவே, மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தேதியை விரைந்து வெளியிட மருத்துவ கலந்தாய்வு குழுவுக்கு (எம்சிசி) உத்தரவிட வேண்டும். எந்தவிதமான சிக்கல்கள் இருந்தாலும், கலந்தாய்வு தேதியை 3 வாரங்களுக்குள்ளாக வெளியிட உத்தரவிட வேண்டும்.

மேலும், நிகழாண்டு நீட்-எம்டிஎஸ் 2021 தகுதி மற்றும் நுழைவுத் தோ்வில் தகுதி பெறும் மாணவா்களுக்கான எம்டிஎஸ் சோ்க்கை கலந்தாய்வை தனியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேரப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விகாஸ் சிங், ‘எம்டிஎஸ் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக மத்திய அரசு மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews