Breaking

Tuesday, July 20, 2021

நவீன பாடங்களுக்காகத் தனிக் கல்வி வாரியம்: மத்திய கல்வி அமைச்சர்

வாய் வழியாக கற்பிக்கப்படும் வேத மரபுகள் மூலம் நவீன பாடங்களுக்காகத் தனிக் கல்வி வாரியம் அமைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று பதில் அளித்துள்ளார். அதில், ''மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனி பகுதியில் உள்ள மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான் (MSRVVP), தனியார் கல்வி வாரியம் அமைக்கும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

அந்தக் கல்வி வாரியத்தில், வாய்வழியாக கற்பிக்கப்படும் வேத மரபுகள் மூலம் நவீன பாடங்களும் கற்பிக்கப்படும்'' என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய அரசின்கீழ், சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மற்றும் தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம் (NIOS) ஆகிய கல்வி வாரியங்கள் இயங்கி வருகின்றன.

எனினும் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக, மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் முக்கியப் பணி, வேத பாடசாலைகளை உருவாக்குவதும் அவற்றுக்கு ஆதரவு அளிப்பதும் ஆகும். இதன்மூலம் பழங்கால வேதங்களைப் பாதுகாத்து, அவற்றை வளர்க்கும் பணியில், மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

தற்போது இந்த அமைப்பு மூலம் தனியார் கல்வி வாரியத்தை உருவாக்கி, அதில் வேத மரபுகள் மூலம் நவீன பாடங்களையும் கற்பிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog