`வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் பதவி!' - சர்ச்சையில் விருதுநகர் பள்ளிக் கல்வித் துறை சி.இ.ஓ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 16, 2018

`வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் பதவி!' - சர்ச்சையில் விருதுநகர் பள்ளிக் கல்வித் துறை சி.இ.ஓ

கல்வியில் சிறந்த விருதுநகர் மாவட்டத்தில், தகுதியானவர்களைப் புறக்கணித்து தனக்கு வேண்டப்பட்டவர்களை முக்கியப் பொறுப்புகளில் நியமித்து, கல்வித் துறையை சீரழித்துவருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமிநாதன் மீது விருதுநகர் மாவட்ட கல்வித் துறையினர் புகார் எழுப்பி வருகிறார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய ஆசிரியர் மற்றும் அலுவலர்கள், `விருதுநகர் மாவட்டம் பள்ளிக் கல்வியில் மாநிலத்திலேயே சிறந்து விளங்கி வருகிறது. ஆனால், இனி அந்தப் பெருமை நிலைக்காது. தற்போது சி.இ.ஓ-வாக இருக்கும் சாமிநாதன், தான் ஒரு கல்வித் துறை அதிகாரி என்பதை மறந்து, சமூகத் தலைவர்போல நடந்துகொள்கிறார். கல்வித் தகுதி, சீனியாரிட்டியைப் புறம்தள்ளி, தனக்கு வேண்டப்பட்டவர்களை முக்கியப் பொறுப்புகளில் நியமித்துள்ளார்.
சமீபத்தில், மீசலூர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சீனுவாசனை சீனியாரிட்டி அடிப்படையில் சி.இ.ஓ-வின் நேர்முக உதவியாளராக மாறுதல் செய்து, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு அனுப்பினார். அனால், அவரை அப்பொறுப்பை ஏற்கவிடாமல் தாமதப்படுத்தி, அந்தப் பொறுப்பில் தனக்கு வேண்டப்பட்ட மோகன் என்பவரைக் கொண்டுவர முயன்றார்.
சீனுவாசன் பொறுப்பு ஏற்றுவிடக் கூடாது என்பதற்காக, பகலில் அலுவலகத்துக்கு வராமல் இரவில் வந்து ஃபைல்களைப் பார்த்தார். இந்த விவகாரம் கலெக்டர், பள்ளிக் கல்வி இயக்குநர் வரை சென்றும் சி.இ.ஓ அதை சட்டை செய்யவில்லை. பாவம், புதிய பணியில் பொறுப்பேற்க முடியாமல் சீனுவாசன் சார் மிகவும் நொந்து போய்விட்டார். இந்த சி.சி.ஓ மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கிறது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பெயரைச் சொல்லி தப்பித்து வருகிறார். கலெக்டர் சிவஞானத்தால்கூட இவர்மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதுவரை தகுதி, சீனியாரிட்டி இல்லாத 16-க்கும் மேற்பட்டவர்களை முக்கியப் பொறுப்புகளில் நியமித்திருக்கிறார்'' என்று பெரிய புகார் பட்டியலையே வாசித்தார்கள்.
இந்தப் புகார்கள் பற்றி சி.இ.ஓ.சாமிநாதனிடம் கேட்டோம், ``என்மீது பொய்யான புகார்களை சிலர் பரப்பி வருகிறார்கள். இன்சார்ஜ் டி.இ.ஓ-வாகவும் சீனுவாசன் இருந்துவந்தார். அதை ரிலீவ் செய்துவிட்டு வந்தால்தான், சி.இ.ஓ-வின் நேர்முக உதவியாளர் பொறுப்பை ஏற்க முடியும் என்று கூறியிருந்தேன். இப்போது, ரிலீவாகி பொறுப்பை ஏற்றுக்கொள்ள உள்ளார். இதில் ஒரு பிரச்னையும் இல்லை. தகுதியான நபர்கள்தான் பொறுப்புக்கு வருகிறார்கள்'' என்றார்.
இந்தநிலையில், சீனுவாசன் பொறுப்பு வகித்த டி.இ.ஓ பதவியில், வழக்கம்போல தகுதியானவர்களைப் புறக்கணித்து, தனக்கு வேண்டப்பட்ட மோகன் என்பவரை சி.இ.ஓ. சாமிநாதன் நியமித்துள்ளதாக அடுத்த புகார் எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்ட கல்வித் துறையைக் காப்பற்ற கல்வித்துறை அமைச்சர் உடனே களத்தில் இறங்க வேண்டும் என்கிறார்கள்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews