கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் ‘நீர் எழில் பள்ளி’ திட்டம்: எழும்பூர் அரசுப் பள்ளியில் அமைச்சர் தொடங்கி வைத்தார்
‘நீர் எழில் பள்ளி’ திட்டம்: எழும்பூர் அரசுப் பள்ளியில் அமைச்சர் தொடங்கி வைத்தார் 'Neer Ezhil Palli' scheme: Minister inaugurates it at Egmore Government School.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தண்ணீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் விதமாக கழிவுநீர் மூலமாக தோட்டம் உருவாக்குவது மற்றும் நிலத்தடி நீரை உயரச் செய்வது உள்ளிட்ட வழிமுறைகளுடன் கூடிய நீர் எழில் பள்ளி' எனும் திட்டம் தனியார் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பள்ளிகளில் தினமும் சுமார் 25,000 லிட்டர் கழிவுநீர் பாதுகாப்பாக சுத்திகரிக்கப்பட்டு மறுபயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். முதல்கட்டமாக சென்னை எழும்பூர், அசோக் நகர், போரூர், அம்பத்தூர், வில்லிவாக்கத்தில் உள்ள 5 அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நீர் எழில் பள்ளி' திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் அமைச்சர் ராஜ் மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வில் மறுசீரமைப்பு வேண்டாம். நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் தவெகவின் இலக்கு.
நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடும் மாணவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம். சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு நிரந்தரத் தீர்வு காண முயன்று வருகிறோம்.
அதேநேரம் சாலைகள் போராடுவதற்கான இடமல்ல. ஜனநாயக முறைப்படி அனுமதி பெற்று போராட்டம் நடத்தினால் ஆதரிக்கிறோம்.
நீட் தேர்வுக்கு எதிராக உரிய அனுமதி பெற்று மாணவர்கள் அறவழியில் போராடினால் பிரச்சினை இல்லை. சாதாரண மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக போராட்டம் நடத்தப்பட்டதால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
டெல்லியில் ஜனநாயக முறைப்படி போராடும் இடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் தமிழகத்தில் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டதால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.