தமிழக அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை - வழிமுறைகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 09, 2024

Comments:0

தமிழக அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை - வழிமுறைகள் வெளியீடு



தமிழக அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை - வழிமுறைகள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் உள்ள மேல்நிலை வகுப்பில் மாணவர் எண்ணிக்கை மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 30-க்கும், ஊரகப் பகுதிகளில் 15-க்கும் குறையக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மாணவர் எண்ணிக்கையின்படி பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டில்(2024-25) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கைக்கேற்ப முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 24 பாடவேளைகளும், இதர பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகளும் குறைந்தபட்சம் வருமாறு பணியாளர் நிர்யணம் செய்யப்படுகிறது. 11, 12-ம் வகுப்புக்கு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதத்தை பின்பற்ற வேண்டும். மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள பகுதி மாநகராட்சி, நகராட்சியாக இருப்பின் 30 மாணவர்களும், ஊரகப் பகுதியாக இருந்தால் மாணவர் எண்ணிக்கை 15 ஆகவும் குறைந்தபட்சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பணிநிர்ணயம் செய்யும் போது மொழிப்பாடத்தில் 24 பாடவேளைக்கும் முதன்மை பாடத்தில் 28 பாடவேளைகளுக்கும் கூடுதலாக இருப்பின் ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம் செய்யலாம். இதுதவிர ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து, அதில் ஒரு பணியிடம் உபரியாக இருப்பின் அந்த இடத்தில் பணியாற்றுபவர்களில் இளையோரை உபரியாக காண்பிக்க வேண்டும்.

அதேநேரம் ஒருமுறை பணிநிரவல் செய்த ஆசிரியர்களை அடுத்த 3 கல்வியாண்டுகளுக்கு மீண்டும் மாற்றம் செய்யக்கூடாது. எனினும், சென்ற பணிநிரவல் நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர் இந்த ஆண்டும் விருப்பம் தெரிவித்தால் அவரை தற்போதைய பணியாளர் நிர்ணயித்தின்போது உபரியாக காண்பிக்கலாம். இந்த வழிமுறைகளை பின்பற்றி முதுநிலை ஆசிரியர்களை பணிநிர்ணயம் செய்து விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews