TNPSC உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு வரம்புக்குள் கொண்டுவந்த திருத்த விதிகள் செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 06, 2024

Comments:0

TNPSC உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு வரம்புக்குள் கொண்டுவந்த திருத்த விதிகள் செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு



டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு வரம்புக்குள் கொண்டுவந்த திருத்த விதிகள் செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்புக்குள் கொண்டு வந்த திருத்த விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த 2011 ஆகஸ்டில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி அப்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்புக்குள் கொண்டு வந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்தது.

இந்தத் திருத்த விதிகளை எதிர்த்தும், அதை 2011-ம் ஆண்டு முதல் முன்தேதியிட்டு அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்பது அரசியலமைப்பு சாசன சட்டத்தின்படி அமைக்கப்பட்டிருந்தாலும், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் அந்த சட்டவிதிகளின்படியே நியமிக்கப்பட்டு இருந்தாலும் இவர்கள் பொது ஊழியர்கள் என்ற சட்ட வரையறைக்குள்தான் வருகின்றனர்.


எனவே இவர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்புக்குள் கொண்டு வந்த திருத்த விதிகள் செல்லும். அந்த விதிகள் தன்னிச்சையானது எனக்கூற முடியாது. இந்த விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆளுநருக்கும் அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விதிகளின் காரணமாக டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உரிமையோ அல்லது டிஎன்பிஎஸ்சியின் தன்னாட்சி அந்தஸ்தோ எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், இந்த விதிகளை முன்தேதியிட்டு அமல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

தவறு செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் இருந்து டிஎன்பிஎஸ்சி-க்கு மட்டும் தனியாக எந்தவொரு விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள நீதிபதிகள், டிஎன்பிஎஸ்சி சார்பில் முந்தைய காலகட்டத்தில் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வுகளை ரத்து செய்யக்கோரி தொரடப்பட்ட வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews