Breaking

Sunday, December 12, 2021

துறைரீதியிலான தேர்வு, பயிற்சியை முடிக்காததால் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியரை பணி நீக்கம் செய்ய முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவரை, துறைரீதியான தேர்வை முடிக்கவில்லை என்பதற்காக பணி நீக்கம் செய்ய முடியாது என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சின்னதுரை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் எனக்கு சர்வேயர் பணி வழங்கப்பட்டது. துறைரீதியான தேர்வு மற்றும் பயிற்சியை முடிக்க நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 2014ல் எனது பணி வரன்முறை செய்யப்பட்டது. இதனிடையே, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் துறைரீதியான தேர்வை முடிக்காததால் விளக்கம் கேட்டு, விருதுநகர் மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் நோட்டீஸ் அனுப்பினார்.

பின்னர், இதையே காரணமாக கூறி என்னை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்து, கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர், துறைரீதியான தேர்வை முடிக்கவில்லை எனக்கூறி பணி நீக்கம் செய்ய முடியாது. எனவே, பணி நீக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை 6 வாரத்திற்குள் அலுவலக உதவியாளர் அல்லது கள உதவியாளர் பணியில் அமர்த்த வேண்டும். காலியிடம் இல்லாவிட்டால் குரூப் 4 பணி நிலையில் நியமிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog