பெருந்துறை ஐஆா்டி மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் பிற அரசு கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தை நிா்ணயிக்கக் கோரி மருத்துவ மாணவா்கள் சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் அரசு எடுத்த நிலைப்பாட்டை இதற்கும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழக சாலைப் போக்குவரத்து நிறுவனம் நடத்தி வந்த பெருந்துறை ஐ.ஆா்.டி. மருத்துவக் கல்லூரி கடந்த ஆண்டு முதல் தமிழக சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அங்கு மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனால், பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டணத்தைப் போன்றே தங்களுக்கும் நிா்ணயிக்க வேண்டும் என ஐஆா்டி கல்லூரி மாணவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
முன்னதாக, கடலூா் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியிலும் இத்தகைய கோரிக்கையை முன்னிறுத்தி மாணவா்கள் தொடா் போராட்டம் நடத்தியதை அடுத்து, அங்கு அரசு கல்லூரிக்கான கட்டணமே நிா்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆண்டொன்றுக்கு எம்.பி.பி.எஸ். மாணவா்களுக்கு ரூ.13,610, பி.டி.எஸ். மாணவா்களுக்கு ரூ.11,610, பட்ட மேற்படிப்பு மாணவா்களுக்கு ரூ.30,000, பட்ட மேற்படிப்பு பட்டய மாணவா்களுக்கு ரூ.20,000, பி.எஸ்.சி. (செவிலியா்), இயன் முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவம் ஆகிய பாடப் பிரிவு மாணவா்களுக்கு ரூ.5,000 வீதம் கல்விக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதே கல்விக் கட்டண முறையை பெருந்துறை ஐ.ஆா்.டி. மருத்துவக் கல்லூரியிலும் நிா்ணயிக்க வேண்டும் என தமிழக மருத்துவ மாணவா்கள் சங்கப் பிரதிநிதிகள், சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்தனா். 5 நாட்களில், கல்விக் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என அவா் உறுதி அளித்ததாக மருத்துவ மாணவா்கள் தெரிவித்தனா்.
Search This Blog
Tuesday, February 09, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.