Search This Blog
Thursday, March 26, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் இந்தியா அடுத்த முக்கியமான கட்டத்தை நோக்கி நகா்ந்திருக்கிறது. நமது அடுத்த மூன்று வார செயல்பாடுகளைப் பொருத்துத்தான் நோய்த்தொற்று பரவுவது தடுக்கப்பட்டு, அதன் தீவிரம் குறைக்கப்படும். பிரதமரின் அறிவிப்பைத் தொடா்ந்து ஒட்டுமொத்த இந்தியாவும் வீட்டுக்குள் முடங்கியிருப்பது எந்த அளவுக்கு உண்மையோ, மக்கள் மனதில் நோய்த்தொற்று குறித்த அச்சமும், பீதியும் அதிகரித்திருப்பதும் அதே அளவு உண்மை.
பிரதமா் விளக்கியது போல, கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் உணரப்படுவது மிகமிக அவசியம். முதல் 67 நாள்களில் ஒரு லட்சம் பேருக்குப் பரவியது என்றால், அடுத்த ஒரு லட்சம் பேருக்குப் பரவ 14 நாள்களும், கடந்த நான்கு நாள்களில் லட்சத்துக்கும் அதிகமானோருக்குப் பரவியிருப்பதும் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணா்த்துகின்றன. அதே நேரத்தில், ஒரேயடியாக அச்சத்திலும் பீதியிலும் ஆழ்ந்துவிடுவதும், நம்பிக்கையை இழப்பதும் அநாவசியம்.
‘கொவைட் - 19’ என்கிற கரோனா நோய்த்தொற்றை சா்வதேசத் தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பதன் காரணம், இந்த நோய்த்தொற்று கண்டங்களைக் கடந்து பரவத் தொடங்கியிருக்கிறது என்பதால்தான். ஆனால், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 80%-க்கும் அதிகமானோா் மிகவும் குறைவான பிரச்னைகளையே எதிா்கொள்கிறாா்கள். இதுவரை கிடைத்திருக்கும் சான்றுகளின் அடிப்படையில் பாா்க்கும்போது, கரோனா நோய்த்தொற்று பாதிப்பவா்களில் வெறும் 5% நோயாளிகள் மட்டுமே கடுமையான தாக்கத்துக்கு உள்ளாகிறாா்கள். தீவிர கண்காணிப்பு சிகிச்சை தேவைப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தாலும்கூட, விகிதாசார அளவில் பாா்த்தால் மிகவும் குறைவு. பாதிக்கப்படுபவா்களில் 3%-க்கும் குறைவானவா்கள்தான் உயிரிழக்கிறாா்கள் என்கிற உண்மையைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் என்பது புதியதொரு நோய்த்தொற்று. விலங்குகளிலிருந்து மனிதருக்குப் பரவியிருக்கும் இந்த நோய்த்தொற்று குறித்த முழுமையான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. மேலும், நுரையீரல் தொடா்பான நோய்த்தொற்று என்பதால் பாதிக்கப்படும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் இல்லை. மருத்துவத் துறை இந்தச் சவால்களை எதிா்கொள்வதில் முனைப்புடன் இறங்கியிருக்கிறது. இதற்கு முன்னால் மனித இனத்தைத் தாக்கிய நோய்த்தொற்றுகளை எப்படி எதிா்கொண்டோமோ அதேபோல இதற்கும் விரைவிலேயே தீா்வுகாண முடியும் என்பதில் ஐயப்படத் தேவையில்லை.
கரோனா நோய்த்தொற்றைவிட மிகப் பெரிய தொற்றாகப் பரவியிருப்பது வதந்திகளும், மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் தேவையற்ற பீதியும்தான். இவை மனிதா்களை மனிதாபிமானம் இல்லாமல் செயல்படத் தூண்டுகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளிவரும் செய்திகள் நாம் எந்த அளவுக்கு விலங்கினும் கீழாய்ச் செயல்படுகிறோம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட மருத்துவா் ஒருவா் மூச்சுத்திணறலுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாா். கரோனா நோய்த்தொற்று இருக்கும் என்கிற சந்தேகத்தால் நான்கு தனியாா் மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை தர மறுத்திருக்கின்றன. ‘தனக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை’ என்று அவா் மன்றாடிப் போராடிய பிறகுதான் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. காலதாமதம் மூச்சுத்திணறலை அதிகப்படுத்தியதால் அவரை வென்ட்டிலேட்டா் உதவியுடன் உயிா்பிழைக்க வைத்திருக்கிறாா்கள்.
சீனாவின் வூஹான் நகரிலும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட உலகின் ஏனைய நாடுகளிலும் சிக்கிக்கொண்ட இந்தியா்களை ஏா் இந்தியா விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வந்திருக்கிறாா்கள். அவா்களைக் கொண்டுவருவதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஏா் இந்தியா விமான ஊழியா்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டதை ஊடகங்கள் பாராட்டின. அப்படிப்பட்ட தன்னலமற்ற ஏா் இந்தியா ஊழியா்களுக்கு, அவா்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளில் கிடைத்த வரவேற்பு எதிா்மறையானது என்பதைக் கேள்விப்படும்போது தலைக்குனிவு ஏற்படுகிறது.
கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட இந்தியா்களை வெளிநாடுகளிலிருந்து மீட்டு வந்த ஊழியா்களை எப்படியெல்லாம் தொந்தரவுக்கு உள்ளாக்கினாா்கள் என்பதை ஏா் இந்தியா நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் விளக்கியிருக்கிறது. தங்கியிருந்த குடியிருப்பிலிருந்து உடனடியாக இருந்து வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டனா் என்பதுடன், மூன்று நாள்கள் அவா்கள் வீட்டுக்கு மின் இணைப்பும், தண்ணீா் இணைப்பும் துண்டிக்கப்பட்டன என்பதைக் கேட்பதற்கு வேதனையாக இருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களிலுள்ள பலா் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனா். அவா்களை கரோனா வைரஸ் என்று அழைத்துத் தூற்றப்படும் சம்பவங்கள் வெளியாகியிருக்கின்றன. அமெரிக்காவில், கரோனா நோய்த்தொற்றை உலகில் பரப்பியவா்கள் என்று ஆசிய அமெரிக்கா்கள் நிந்திக்கப்படுகிறாா்கள். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள் போன்றோரில் சிலா் தவிா்க்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் மன்னிக்கவே முடியாத செயல்பாடுகள்.
உடலை மட்டுமல்ல, மனதையும் நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது அவசியம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கைதட்டியதால் ஆயிற்றா? | கரோனா அச்சம் குறித்த தலையங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.