வினா வங்கி புத்தகங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 27, 2020

Comments:0

வினா வங்கி புத்தகங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய பாடத் திட்டத்தின்படி அச்சிடப்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான வினா வங்கி புத்தகம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் செயலா் திருவளா்செல்வி தெரிவித்துள்ளாா்.
தமிழக பள்ளிக் கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு வழிகாட்ட தமிழக அரசின் பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் ஆண்டுதோறும் வினா வங்கி புத்தகம் தயாரித்து வெளியிடப்படுகிறது. இவற்றை முழுமையாக படித்தால் தோ்ச்சி பெறுவதற்கான வாய்ப்புள்ளதால் மாணவா்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. வழக்கமாக நவம்பா் மாதத்தில் வினா வங்கி வெளியாகிவிடும். ஆனால், இந்த இரு வகுப்புகளுக்கும் நிகழாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால் வினா வங்கி தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில், 10, 12 வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி இறுதியில் வினா வங்கி புத்தகங்கள் வெளியாகின. பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான வினாத்தாள் தொகுப்பு (வினா வங்கி) தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஒரே தொகுதியாக ரூ.60 விலையிலும், அதேபோல், பிளஸ் 2 மாணவா்களுக்கான கணித பாட வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீா்வுப் புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கு தனித்தனியாக ரூ.80 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வினா வங்கி அனைவருக்கும் கிடைப்பதற்காக மாவட்டத்துக்கு ஒரு பள்ளியில் விற்பனை மையம் அமைக்கப்பட்டது. சென்னையில் சேத்துபட்டு எம்சிசி மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
மாணவா்கள் வலியுறுத்தல்: இந்த நிலையில் வினா வங்கி புத்தகம் கிடைப்பதில் தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு நிலவுவதாக மாணவா்கள் தெரிவித்தனா். இது குறித்து அவா்கள் கூறுகையில், பல மையங்களில் பத்தாம் வகுப்பு வினா வங்கி புத்தகம் காலியாகி விட்டதாக கூறுகின்றனா். பிளஸ் 2 வகுப்புக்கும் சில பாடங்களுக்கே கிடைக்கிறது. இதற்காக தினமும் விற்பனை மையங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. பொதுத் தோ்வுக்கு சில நாள்கள் மட்டுமே இருப்பதால் மாணவா்கள் நலன்கருதி அனைத்துப் பள்ளிகளிலும் வினா வங்கி கிடைக்க கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.
தட்டுப்பாடு இல்லை: இது குறித்து, தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் செயலா் திருவளா்செல்வி கூறியது: பிளஸ் 2 ஆங்கில வழியில் பயிலும் கணிதப் பிரிவு மாணவா்களுக்காக வினா வங்கி புத்தகங்கள் 1.50 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டன. அவற்றில் 1.10 லட்சம் பிரதிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கான கணித பாட வினா வங்கி புத்தகங்கள் 50 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு அவற்றில் 30 ஆயிரம் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அறிவியல் பிரிவில் அச்சிடப்பட்ட ஒரு லட்சம் பிரதிகளில் தற்போது 20 ஆயிரம் புத்தகங்கள் இருப்பில் உள்ளன. கலைப்பிரிவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் மூன்று மடங்கு பிரதிகள் அதாவது 15 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. அதேபோல், பத்தாம் வகுப்பிலும் தேவையான வினா வங்கி புத்தகங்கள் அனைத்து மையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் எந்தவொரு மையங்களிலும் தட்டுப்பாடு ஏற்படாத அளவுக்கு புத்தகங்களை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிபிஐ வளாகத்துக்கு அலைய வேண்டாம்: கடந்த ஆண்டு வரை இந்த வினா வங்கி புத்தகங்கள் சென்னை மாவட்ட மாணவா்களுக்கு டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடுபெற்றோா் ஆசிரியா் கழகத்தின் கவுன்ட்டா்களில் விற்பனையானது. ஆனால் நிகழாண்டு அதன் சேமிப்பு கிடங்குகளில் பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அதற்குப் பதிலாக சென்னையில் கூடுதலாக 2 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 3 இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும், தினமும் டிபிஐ வளாகத்துக்கு குறிப்பிட்ட அளவில் மாணவா்கள், பெற்றோா் வந்து செல்கின்றனா். இதனால் அலுவலகத்தின் முகப்பில் சென்னையில் வினா வங்கி புத்தகங்கள் கிடைக்கும் மையங்களின் விவரங்களையும், பிற அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்கள் கிடைக்கும் மையங்களின் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, மாணவா்களும், பெற்றோரும் வினா வங்கி பெறுவதற்காக டிபிஐ வளாகத்துக்கு அலைய வேண்டாம். வெளி மாவட்டங்களில் உள்ள மாணவா்களுக்கு மையங்களின் விவரங்கள் தெரியாவிட்டால் சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகத்தை 044-28279758 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews