தபால்துறை தேர்வுகள், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் நடத்தப்படுவதை ஏற்க முடியாது என, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், பார்லி.,யில் கடும் நெருக்கடி தந்ததை அடுத்து, ஏற்கனவே நடைபெற்ற தேர்வுகளை ரத்து செய்வதாக, மத்திய அரசு நேற்று அறிவித்தது. 'தமிழில் புதிதாக தேர்வு நடத்தப்படும்' என, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.
'தபால்துறை தேர்வுகளை, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்துவதை ஏற்க முடியாது' என, தி.மு.க.,வின் பார்லி., குழு தலைவர் டி.ஆர்.பாலு, லோக்சபாவில் நேற்று முன்தினம், கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த விவகாரம், ராஜ்யசபாவிலும் நேற்று வெடித்தது. காலையில் சபை துவங்கியதும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள், அமளியில் ஈடுபட்டனர். சபைத் தலைவர் வெங்கையா நாயுடு, எவ்வளவோ சமாதானம் செய்தும், உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால், சபை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் சபை கூடியபோது, தமிழக எம்.பி.,க்கள், ஆவேசம் காட்டினர். அப்போது, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயன்சிங், கேள்வி நேரத்தை அனுமதிக்கும்படி, கேட்டுக் கொண்டார்.
ஆனாலும், அமளி தொடரவே, பார்லிமென்ட் விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன், ''இந்த விவகாரம் குறித்து, ஆலோசனைகள் தொடர்கின்றன. புதன்கிழமை காலையில், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உரிய விளக்கத்தை அளிப்பார்,'' என்றார்.
இதை ஏற்காத தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா, ''ஒருநாள் அல்ல; ஒரு மணி நேரம் கூட பொறுத்துக் கொள்ள முடியாது. இன்றே இப்போதே, சபைக்கு அமைச்சர் வந்தால் மட்டுமே, அமைதி காப்போம்,'' என, கூறினார். அ.தி.மு.க., எம்.பி.,க்களும் ரகளையை தொடர்ந்தனர். இதையடுத்து, சபை நடவடிக்ககைளை தொடர முடியாத நிலை ஏற்படவே, 2வது முறையாக, ஒத்திவைக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்குபின், சபை கூடியதும், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சபையில், அறிக்கை தாக்கல் செய்து பேசியதாவது: தமிழக எம்.பி.,க்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அவர்கள் கூறும் பிரச்னையை ஆராய்ந்தேன். அதன்படி, கடந்த ஞாயிறு அன்று நடந்த, தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.
கடந்த மே, 10ல், தபால் துறையில் இருந்து வெளியான அறிவிப்பின்படி, இனிமேல் தமிழ் உள்பட, அனைத்து மாநில மொழிகளிலும், புதிதாக தேர்வுகள் நடத்தப்படும்.நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில மொழிகள் அனைத்தையுமே மதிக்கிறது. தமிழ் மொழியின் ஆழம் என்னவென்பதையும் உணர்ந்துள்ளது. எனவே, ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதையை, மத்திய அரசு நிச்சயம் வழங்கும்.
இந்த விவகாரம் குறித்து, அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் கேட்டு பெற்று, அவற்றை ஆராய வேண்டியிருந்ததால், கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால், சபைக்கு தாமதமாக வந்து விளக்கம் அளிக்க நேரிட்டுவிட்டது. இதற்காக, மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத், பேசினார். இதையடுத்து தமிழக எம்.பி.,க்கள் உற்சாக குரலில் நன்றி தெரிவித்தனர்.
ஸ்டாலின் வரவேற்பு
'தபால் துறை போட்டித் தேர்வுகள், தமிழ் மொழியில் நடத்தப்படும் என, மத்திய சட்ட அமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கும் வகையில், தபால் துறையின் சார்பில், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தப்பட்ட போட்டித் தேர்வு, ரத்து செய்திருப்பது, மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. தி.மு.க., - எம்.பி.,க்கள், லோக்சபா, ராஜ்யசபாவில், இது குறித்துப் பிரச்னையை கிளப்பி, கடுமையாக எதிர்த்தனர்.
மேலும், தமிழிலும், மாநில மொழிகளிலும், தேர்வு நடத்த வேண்டும் என, அழுத்தம் கொடுத்தனர். இந்நிலையில், 'தேர்வு ரத்து, தமிழ் மொழியிலும் இனிமேல் தேர்வு' என்ற அறிவிப்பை, மத்திய சட்டத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ளார். 'தி.மு.க., வெற்றி பெற்று, என்ன சாதிக்கப் போகிறது' என, வீண்வாதம், விதண்டாவாதம் செய்தவர்களுக்கு, இப்போது கிடைத்துள்ள வெற்றி, நிரந்தரமான வாய்ப்பூட்டு போடும் என, நம்புகிறேன்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் இல்லாமல் ஜூலை 14-ம் தேதி நடத்தப்பட்ட அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடந்த அஞ்சல் துறை தேர்வில் பிராந்திய மொழிகளை விடுத்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. வழக்கமாக தமிழிலும் கேள்விகள் கேட்கப்படும் என்பதால் தமிழ் இல்லாததைக் கண்டு தேர்வாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இது இந்தியைத் திணிக்கும் முயற்சி எனவும், தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனால் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் எனக் கோரி சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் கோஷம் எழுப்பினர்.
அதிமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் உத்தரவுகளை மீறியும் அதிமுகவினர் அவையின் மையப்பகுதிக்குச் சென்று கூச்சலிட்டனர். அதேபோல திமுக எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜனும் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பினார். இதனால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U