நீட் தேர்வில் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட 49 கேள்விகளுக்கான மதிப்பெண் வழங்கப்படும் என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதை எதிர்த்து, சிபிஎஸ்இ அமைப்பு மேல் முறையீடு செய்யவுள்ளது.
கடந்த மே 6ஆம் தேதியன்று நடந்த நீட் தேர்வின்போது, தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்குக் கேட்கப்பட்ட 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இந்தக் கேள்விகளுக்குத் தலா நான்கு மதிப்பெண் கருணை அடிப்படையில் வழங்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. ரங்கராஜன். இந்த வழக்கில் நேற்று (ஜூலை 10) நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. 49 தவறாக மொழிபெயர்க்கப்பட்ட கேள்விகளுக்கான 196 மதிப்பெண்ணை வழங்க வேண்டுமென்று சிபிஎஸ்இ அமைப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் புதிய தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்க வேண்டுமென்றும், அதன் அடிப்படையில் கவுன்சலிங் நடத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்வித் துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். சிபிஎஸ்இ அமைப்பு எடுக்கும் முடிவைப் பொறுத்தே தமிழக அரசின் நடவடிக்கைகள் அமையுமென்று தமிழக அதிகாரிகள் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பைத் தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ அமைப்பு மேல்முறையீடு செய்யும் எனக் கூறப்படுகிறது. இதனை எதிர்கொள்ளும்பொருட்டு, கேவியட் மனு தாக்கல் செய்யப்படும் என்று ரங்கராஜன் தரப்பு வழக்கறிஞர் ஷாஜி செல்லன் ஏற்கெனவே கூறியிருந்தார்.
நீட் தேர்வுக்கான தமிழ்க் கேள்வித்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட விவகாரத்தை முதலில் எழுப்பியது டெக் பார் ஆல் என்ற அமைப்பு. இதன் நிறுவனர் ராம்பிரகாஷ், இந்தத் தீர்ப்பை வரவேற்பதாகக் கூறினார். இதனால் கூடுதலாக 39 சதவிகித மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பு பெறுவார்கள் என்று தெரிவித்தார். “இந்தக் கோளாறுகள் சரிசெய்யப்படும் வரை நீட் நடத்தாமல் இருப்பது நல்லது. மாணவர்களின் நலன் கருதி, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ அமைப்பு மேல் முறையீடு செய்யக் கூடாது” என்று அவர் கூறினார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.