நாமக்கல்லில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பிளஸ்1 பாடபுத்தகங்கள் முழுமையாக வராததால், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்துகின்றனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புக் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாடத்திலும் யுஆர் கோடு என புதிய பகுதி இடம்பெற்றுள்ளது. இதை ஆன்ட்ராய்டு போனில் ஸ்கேன் செய்து ஓபன் செய்தால் பாடங்கள் குறித்து மாணவ, மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வீடியோ படக்காட்சிகள் இடம்பெறுகிறது.மேலும், ஒவ்வொரு பாடத்துக்கும் ஏராளமான படங்கள், பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம் சிறப்பான முறையில் இருப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில் அரசு பள்ளிகள், கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான 1, 6 மற்றும் 9ம் வகுப்பு பாடபுத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு விட்டது. ஆனால், பிளஸ்1 வகுப்புக்கான புதிய புத்தகம் முழுமையான அளவு வரவில்லை. குறிப்பாக இயற்பியல், வேதியியல், உயிரியியல் போன்ற பாடங்களுக்கு 2 தொகுதி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதில் ஒருதொகுதி மட்டுமே வந்துள்ளது. ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் புதிய பாடபுத்தகங்களை ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தும்படி கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் ஒவ்வொரு பாடபுத்தகத்தில் உள்ள முதல் பாடத்தை மட்டும் பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், வரும் 15ம் தேதிக்குள் தேவையான அனைத்து புத்தகங்களும் வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு பின் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும் என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.