வட மாவட்டங்களில் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் தகவல் Measures Taken to Improve Pass Rates in Northern Districts: Minister Rajmohan Informs
பொதுத் தேர்வுகளில் வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் விதமாக கல்விப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவர்கள் சோர்ந்துவிடாமல் அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
சமூக, பொருளாதார, தனிநபர் காரணங்களுக்காக பள்ளிக்கு வராவிட்டால் உடனே அந்த மாணவரின் வீட்டுக்கே சென்று பள்ளிக்கு வரவைக்க முயற்சி மேற்கொள்வோம். மெல்லக் கற்கும் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடரும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நாம் அடுத்தகட்டத்துக்குச் செல்ல முடியாது. ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் குறித்து நீதிமன்றத்தில் சில வழக்குகள் உள்ளன.இந்த பிரச்சினைக்கு நல்ல வழிபிறக்கும்.
பொதுத் தேர்வுகளில் வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் விதமாக கல்விப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சியில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களே கடைசி 10 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.