விஜய் பிரச்சாரத்தால் பள்ளி அருகே இடையூறு: 10-ம் வகுப்பு தேர்வு எழுத 30 நிமிடங்கள் கூடுதல் அவகாசம் Disruption Near School Due to Vijay's Campaign: 30 Minutes of Extra Time Granted for 10th Grade Exam
திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தால் இடையூறு ஏற்பட்டதால், அதன் அருகில் இருந்த அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 30 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக தவெக தலைவர் விஜய், பாலக்கரை பழைய மதுரை சாலையில் உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர், அதன் அருகில் உள்ள மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதியில் பிற்பகல் 12.30 மணியளவில் வேனில் இருந்தவாறு பிரச்சாரம் செய்தார். இதற்காக நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு திரண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். விஜய் பிரச்சாரம் செய்த இடம் அருகே சையது முர்துஷா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 170 பேர் நேற்று பொதுத்தேர்வு எழுதினர். இத்தேர்வுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக விஜய் வருகைக்கு முன்னதாக ஸ்பீக்கர் பயன்படுத்தக்கூடாது என போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர்.
அதேவேளையில், விஜய் அங்கு பிரச்சாரத்துக்காக வந்த போது ஸ்பீக்கர் மூலம் தவெக பிரச்சாரப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. விஜய் அங்கு சுமார் 20 நிமிடங்கள் பிரச்சாரம் செய்துவிட்டு பிற்பகல் 1 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
இதையடுத்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே.சரவணனிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா அனுமதி பெற்று அந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக 30 நிமிடம் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கினார். இதையடுத்து பிற்பகல் 1.15 மணிக்கு முடிய வேண்டிய தேர்வு 1.45க்குதான் முடிந்தது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.