அரசு பள்ளிகளில் ஜூலை 25-ல் மேலாண்மை குழு கூட்டம்: பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவு
அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டத்தை ஜூலை 25-ம் தேதி நடத்துமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள் (எஸ்எம்சி) கூட்டம் கடந்த அக்டோபர் முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இக்கூட்டத்தை மாதம்தோறும் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டின் முதல் எஸ்எம்சி குழு கூட்டம் ஜூலை 25-ம் தேதி மாலை 3 முதல் 4.30 மணி வரை நடக்க உள்ளது. இதில் பள்ளிகள், மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அம்சங்களை தீர்மானமாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.
ஸ்லாஸ் தேர்வு, திறன் இயக்க பயிற்சி, எண்ணும், எழுத்தும், இல்லம் தேடி கல்வி, உயர் கல்வி வழிகாட்டி, இடை நிற்றல் கணக்கெடுப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும். அதற்காக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எஸ்எம்சி கூட்டத்தை தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.