பேருந்து படிக்கட்டில் பயணம் - 3 மாணவர்கள் பலி
செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் பேருந்து உரசியதில் மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
செங்கல்பட்டு: கண்டெய்னர் லாரி மீது தனியார் பேருந்து உரசியதில் 3 கல்லூரி மாணவர்கள் பலி
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் இருந்து அச்சரப்பாக்கம் வழியாக மதுராந்தகம் நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது பேருந்து பக்கவாட்டில் உரசியதில், படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் தவறி விழுந்தனர்.
இந்த கோர விபத்தில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு கல்லூரி மாணவர் ரஞ்சித் பலத்த காயத்துடன் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த மூவரும் மதுராந்தகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வந்த கமலேஷ், தனுஷ், மோனிஷ் ஆகிய மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tuesday, March 12, 2024
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.