சென்னை ஐஐடி-யில் பயிலும் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் 100% நிதி உதவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 09, 2024

Comments:0

சென்னை ஐஐடி-யில் பயிலும் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் 100% நிதி உதவி

சென்னை ஐஐடி-யில் பயிலும் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் 100% நிதி உதவி

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களும், சமூகப் பொறுப்புணர்வு நிதி கூட்டாளர்களும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள பிடெக் மாணவர்களுக்கு 100 சதவீத நிதியுதவியை இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக வழங்க முன்வந்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி, மத்திய-மாநில அரசுகள் மாணவர்களுக்காக அளித்துவரும் கணக்கிலடங்கா நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகை ஆதரவுகளில் 'மெரிட்-கம்-மீன்ஸ்' (MCM) உதவித் தொகையும் ஒன்று. எஸ்சி/எஸ்டி மாணவர்கள் எந்தப் பாடத்திட்டத்தில் சேர்ந்திருந்தாலும் அவர்களின் பெற்றோரின் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின்கீழ் இந்திய அரசு அளித்துவரும் மூன்றில் இரு பங்கு கல்விக் கட்டணத் தள்ளுபடியுடன் 'எம்சிஎம்' கல்வி உதவித் தொகையும் சேர்த்து வழங்கப்படுவதால், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் / பொதுப்பிரிவினர் / இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தகுதியுள்ள பிடெக்/ இரட்டைப் பட்ட மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதில் முழு விலக்குப் பெறுவார்கள். இந்த ஆதரவின் மூலம் மாணவர்கள் தங்களின் பணப்பிரச்சினைகள், கல்விக் கடன்கள் பற்றிய கவலைகள் இன்றி படிப்பிலும் எதிர்காலக் கல்வியைத் தொடருவதிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.

இத்தகைய நிதியுதவியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "தேவையுள்ள மாணவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு இயன்றவரை நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இதனை செயல்படுத்த உதவிய நன்கொடையாளர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.

இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் 490 மாணவர்களுக்கு ரூ.3.26 கோடி வழங்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டான 2023-24ல் 495 மாணவர்களுக்கு ரூ.3.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகையான ரூ.66,667 இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கல்வியாண்டின் இரு செமஸ்டர்களுக்கும் சரிபாதியாக வழங்கப்படுகிறது. மாணவர்களின் நலனுக்கான பங்களிப்புக்காக முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்த சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா, "நிதித் தேவையுள்ள எந்த மாணவரும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு முழு கல்வித்தொகை பெறுவதில் விடுபடவில்லை என்பதில் எங்களது அலுவலகத்திற்கு மிக்க மகிழ்ச்சி. இத்திட்டத்தை செயல்படுத்த ஆதரவளித்த அனைத்து முன்னாள் மாணவர்கள், பெருநிறுவனக் கூட்டாளர்களுக்கு மனம்நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.

பணபிரச்சினையால் ஏற்பட்ட அழுத்தத்தில் இருந்து விடுபட எம்சிஎம் கல்வி உதவித்தொகை எவ்வாறு உதவியது என்பது குறித்து அதனால் பயன்பெற்ற சென்னை ஐஐடி மாணவர் ஜி.அக்சித் கூறுகையில், "எனது குடும்பத்தில் முறையான பொறியியல் பட்டம் பெற்ற முதலாவது நபர் நான்தான். இதனால் என் குடும்பம் பெருமையடைந்தது. எனது குடும்பத்திற்கு எவ்வித சுமையையும் ஏற்படுத்தாமல் கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணத்தை செலுத்த சென்னை ஐஐடி-ன் கல்வி உதவித்தொகைகள் உதவுகின்றன” என்றார்.

மாணவி எஸ்.சாய்ஸ்ரீ கூறும்போது, "சென்னை ஐஐடி-ல் என்னை சேர்த்தே ஆக வேண்டும் என்ற என் தந்தையின் கனவை நிறைவேற்ற முடிந்திருக்கிறது. நான் பிறப்பதற்கு முன்பே அவர் இங்குதான் பணிபுரிந்து வந்தார். தினக்கூலியாக வேலை செய்தபோது ஐஐடி மெட்ராஸ்-ஐ சுற்றிப்பார்த்த அவர், இது மிகவும் மதிப்புவாய்ந்த கல்வி நிறுவனம் என்பதைக் கண்டார். எனவே, என்னை இங்கே படிக்க வைத்தே தீருவது என்பது அவரது கனவாக இருந்தது. அந்தக் கனவுதான் உண்மையிலேயே சென்னை ஐஐடி-ல் நான் நுழைவதற்கும் காரணமாக அமைந்தது. பாடத்திட்டம், கல்விக் கட்டணம் போன்ற விவரங்களை சென்னை ஐஐடி இணையதளத்தில் பார்வையிட்டபோது, முன்னாள் மாணவர்களின் கல்வி உதவித்தொகை வாயிலாக ஏசிஆர் அலுவலகம் கட்டண விலக்கு பெற்றுத் தருவது தெரிய வந்தது. இங்கு நான் சேர்ந்தபின், இந்த கல்வி உதவித்தொகை குறித்து இமெயில் மூலம் எனக்குத் தகவல் வந்தது” என்றார். அனீஷ் அமுலோஜு கூறுகையில், “தற்போது நிதிச்சுமை நீங்கிவிட்டதால் எனது படிப்புகள், இலக்குகள், கனவுகள் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்கவும், கவனம் செலுத்தவும் முடிகிறது. அத்துடன் என் வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய இலக்குகள் குறித்து சிந்திக்க முடிகிறது” எனக் குறிப்பிட்டார். சோஹம் ஷா கூறும்போது, “முதலில் கல்வி உதவித்தொகை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாதபோது, அதுபற்றி தேடத் தொடங்கலாம் என சிந்தித்தோம். ஆனால், உதவித் தொகை பற்றிய மின்னஞ்சல் வந்தபோது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கல்வி உதவித் தொகை கிடைத்தன் மூலம் படிப்பைப் பற்றியும், ஹார்வர்டு போன்ற எந்த கல்வி நிறுவனத்திலும் மேற்படிப்பைத் தொடருவது பற்றியும் சிந்திக்கும்போது குடும்பத்தின் பணப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தக் கூடாது, மாறாக கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்தது. எனது வேலையை நான் முறையாக செய்யும் பட்சத்தில், மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் போன்ற எத்தனையோ பேர் எனக்கும், பிற மாணவர்களுக்கும் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி-ல் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் கல்வியைத் தொடரும் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, ஃபெலோஷிப் வடிவில் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவரவர் கல்வித்திறன் அடிப்படையில் முன்னாள் மாணவர்களின் நிதியுதவித் தொகை கிடைக்கும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-ல் முழு கல்விக் கட்டணத் தள்ளுபடி உண்டு. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.50 லட்சத்திற்கும் குறைவாக உள்ள எஸ்சி/எஸ்டி மாணவர்கள் எம்.ஏ. பாடத்திட்டத்தில் சேரும்போது, அவர்களுக்கு இலவச மெஸ் வசதி, மாதம் ரூ.250 பாக்கெட் அலவன்ஸ், கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக்கான வாடகை ஆகியவற்றை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், ரூ. 4.50 லட்சத்திற்கும் குறைவாக பெற்றோரின் ஆண்டு வருமானம் உள்ள எம்.ஏ. பாடத்திட்ட மாணவர்களில் 25 சதவீதம் பேருக்கு தகுதி கல்வி உதவித்தொகையும் (Merit Scholarship) வழங்கப்பட்டது. இதுதவிர, சென்னை ஐஐடி பிடெக் பாடத்திட்டத்தில் சிறந்த மாணவர்களுக்கு NCERT, மத்திய-மாநில அரசுகளால் அனுமதிக்கப்படும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு கல்வி உதவித்தொகை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம் மூலம் வழங்கப்படுகிறது. பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வு (Graduate Aptitude Test in Engineering - GATE) மூலம் எம்.டெக் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பகுதிநேர கற்பித்தல் உதவியாளர்கள் (HTTA) என்ற முறையில் மாதந்தோறும் ரூ.12,400 வழங்கப்படுகிறது. எம்.எஸ்சி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தகுதி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.

பொறியியல் முழுநேர பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்பில் சேர்க்கப்படும் கல்வியாளர்களுக்கு பகுதிநேர கற்பித்தல்/ஆராய்ச்சி உதவியாளர்கள் (HTRA) என்ற முறையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.37,000 வீதமும், அடுத்த மூன்றாண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.42,000 வீதமும் அனுமதிக்கப்படுகிறது. ஆராய்ச்சி அறிஞர்கள் சர்வதேச மாநாடுகளில் கட்டுரைகளை சமர்ப்பிக்க நிதியுதவி வழங்கி இக்கல்வி நிறுவனம் ஊக்குவிக்கிறது. எம்.எஸ், பிஎச்டி கல்வியாளர்களுக்கு பதிவுக் கட்டணம் உள்பட ரூ.1,50,000 உச்சவரம்பாக நிதியுதவி வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews