Breaking

Wednesday, June 15, 2022

M.Sc., மாணவர் சேர்க்கையில் மாநில இடஒதுக்கீடு பின்பற்றப்படும்: மதுரை காமராஜ் பல்கலை அறிவிப்பு

மதுரை காமராஜ் பல்கலை எம்.எஸ்சி., உயிர் தொழில்நுட்பவியல் படிப்பில் மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றியே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் இப்படிப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு 'இப்பல்கலை மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால் அதுசார்ந்த இடஒதுக்கீடு தான் பின்பற்ற வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பல்கலை பதிவாளர் கண்ணன் தெரிவித்துள்ளதாவது:மாநில பல்கலை என்பதால் தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை தான் மாணவர் சேர்க்கை பின்பற்ற வேண்டும் என்ற பரிசீலனையை வலியுறுத்தி மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் உயிர் தொழில்நுட்பத் துறை செயலருக்கு துணைவேந்தர் குமார், ஜூன் 14ல் கடிதம் எழுதியுள்ளார்.

மொத்தமுள்ள 30 இடங்களில் பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்டோருக்கு தலா 9 இடங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 6, தாழ்த்தப்பட்டோர் 5, பழங்குடியினருக்கு 1 இடங்கள் ஒதுக்கப்படும். இதை பின்பற்றியே இக்கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 'ஒன்றிய அரசு' சர்ச்சை இப்பல்கலை செய்திக் குறிப்பில் மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசை தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தான் இவ்வாறு உச்சரிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் வேந்தராக கவர்னர் உள்ளார். கவர்னர் அலுவலகம், இதுவரை 'மத்திய அரசு' என்றே குறிப்பிட்டுவரும் நிலையில், கவர்னர் கட்டுப்பாட்டில் உள்ள இப்பல்கலை 'ஒன்றிய அரசு' என குறிப்பிடப்பட்டுள்ளது கவர்னர் அலுவலகத்தை அதிருப்தியடைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog