Breaking

Friday, April 01, 2022

ஆசிரியர்களை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்க கூறிய தனி நீதிபதி உத்தரவு ரத்து

ஆசிரியர்களின் நடத்தை மற்றும் கற்பித்தல் திறனை கண்காணிக்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவு ஐகோர்ட் கிளை அமர்வில் நீக்கம் செய்யப்பட்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் முத்து. கடந்த 8.7.2004ல் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவரது பணி, 1.6.2006 முதல் வரன்முறை செய்யப்பட்டது. இதை 2004 முதல் கணக்கிடக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘‘வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் உரிய அதிகாரிகளை மனுதாரர் அணுகவில்லை. எனவே, அவரது கோரிக்கையை ஏற்க முடியாது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.1 லட்சம் கூடுதலாக ஊதியம் பெறுகின்றனர். தலைமுறையை உருவாக்கும் குழந்தைகளுக்கான கல்வியை வழங்குவதால் அவர்கள் நன்னடத்தையுடன் இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆசிரியர்களின் நடத்தையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கல்வித்துறையினர் கடுமையாக்க வேண்டும். ஆசிரியர்களின் நடத்தையை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் உரிய அதிகாரிகளால் கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து ஆசிரியர் முத்து தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆர்.விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தரப்பில், ‘‘மனுவில் கேட்கப்படாத நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கியுள்ளார்’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரரின் கோரிக்கைக்கு சம்பந்தமில்லாத ஆசிரியர்களின் நடத்தையை கண்காணிக்கும் உத்தரவுகள் தேவையற்றது என்பதால் நீக்கப்படுகிறது. அதே நேரம் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை என்பதால், இந்த அப்பீல் மனு முடித்து வைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog