Breaking

Friday, September 17, 2021

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 20 பொறியியல் கல்லூரிகள் மூடல்

தமிழகத்தில் தற்போது துவங்கியுள்ள நடப்பு கல்வியாண்டில் தன்னிச்சையாக செயல்பட்டு வந்த சுமார் 20 பொறியியல் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை எதுவும் நடத்தப்படாததால், அவை மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


பொறியியல் கல்லூரிகள்


சமீப காலமாக பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது. இதற்கு வேலையின்மை ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் பொறியியல் படிப்புகளில் அதிகரித்து வந்த மாணவர் சேர்க்கை காரணமாக தடுக்கி விழுந்த இடமெல்லாம் புதிய புதிய பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலையின்மை பிரச்சனை உருவான பிறகு இந்த படிப்பு மீதான ஆர்வம் வெகுவாக குறைந்தது.


பொதுவாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் பொறியியல் சுயநிதி கல்லூரிகள் இயங்குகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை துவங்குவதற்கு AICTE மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற வேண்டும். அந்த வகையில் 2021 -22ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அனுமதிக்காக விண்ணப்பித்த பொறியியல் கல்லூரிகளுக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி வரை AICTE மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி வந்தது. இதில் பல பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை அனுமதிக்காக விண்ணப்பிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனென்றால் கொரோனா தொற்று காரணமாக பல பொறியியல் சுயநிதி கல்லூரிகள், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை என்றும் கல்வி நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதிலும் குறிப்பாக பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலையின்மை காரணமாக புதிய மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் நடப்பு 2021 -22 ஆம் கல்வியாண்டில் சுமார் 440 பொறியியல் கல்லூரிகளில் 1,51,870 இடங்களுக்கு அரசு இடஒதுக்கீட்டு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை பணிகள் துவங்க உள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டில் சுமார் 460 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்ற நிலையில், தற்போது இதில் 20 கல்லூரிகள் குறைந்து 460 பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog