Breaking

Sunday, August 15, 2021

பள்ளி மாணவிகள் எதிர்காலத்தை சிதைத்த கொரோனா

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் ஏழை மாணவிகள் பலருக்கும் கொரோனா தொற்று காலத்தில் திருமணம் முடிந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. கல்வித்துறை கணக்கெடுப்பில் அந்த மாணவிகளை மைக்ரேஷன் (வேறு ஊருக்கு மாறி செல்லுதல்) என குறிப்பிட அதிகாரிகள் வற்புறுத்துவதாக தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.

பள்ளி செல்லா மாணவர்கள் மற்றும் இடைநிற்றல் தொடர்பான கணக்கெடுப்பு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் இந்தாண்டு ஆக.,11 துவங்கி 31 வரை நடக்கிறது. 6 - 19 வயதுள்ள மாணவர் கடந்தாண்டு படித்து இந்தாண்டு எந்த பள்ளியிலும் சேராதவர் விவரம் எமிஸ் இணையத்தில் தனியாக வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் 40 ஆயிரம் உட்பட மாவட்டம் வாரியாக பல ஆயிரம் மாணவர்கள் இப்படி உள்ளனர். அவர்கள் வீடுகளுக்கே சென்று தலைமையாசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் உள்ளிட்ட கணக்கெடுப்பு குழு ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இதில் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் பலருக்கு திருமணம் முடிந்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:

கொரோனாவால் மாணவர்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். பிழைப்புக்காக பெற்றோர் வேலைக்கு சென்று விடுகின்றனர். தற்போது வீட்டில் தனியாக விடலை பருவ மாணவர்களை பெற்றோர் உரிய முறையில் கண்காணிக்க முடியவில்லை. குறிப்பாக பல்வேறு சமூக சூழல்களுக்கு பயந்த பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு சொந்தத்தில் திருமணம் முடித்து விட்டனர்.

திருமணம் குறித்து கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்தால், எங்களை சமூக நலத்துறையிடம் புகார் அளிக்க கூறுகின்றனர். பெற்றோர் மீது புகார் அளித்தால் தேவையில்லாத பிரச்னைகளை நாங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் அந்த மாணவிகளை மைக்ரேஷன் என குறிப்பிட்டு ஆய்வை முடித்து வருகிறோம். இது ஒரு சமூகப் பிரச்னை. மாணவிகள் மைக்ரேஷன் குறித்து கல்வித்துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog