Breaking

Tuesday, June 29, 2021

பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத 32,262 பேருக்கும் தேர்ச்சிக்கான மதிப்பெண் - பள்ளிக்கல்வித்துறை திட்டம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து பொதுத் தேர்வுகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 9ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு ‘ஆல்பாஸ்‘ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக பிளஸ் 2 மாணவர்களுக்கும் தற்போது தேர்ச்சி மதிப்பெண் வழங்குவதற்கான அறிவிப்பையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், 2019-2020ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 படித்து தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மேற்கல்வி ஆண்டில் மொத்தம், 8 லட்சத்து 15 ஆயிரத்து 442 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினர். அவர்களில் 32,262 பேர் தேர்ச்சி பெறவில்லை. மேற்கண்ட கல்வி ஆண்டில் தேர்வு நடக்கின்ற போது, கொரோனா அறிவிப்பு வெளியிட்டதால் பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வில் ஒரு பாடத் தேர்வு நடத்தப்படாமல் விடுபட்டது. அந்த தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டது. தற்போது பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்ச்சி மதிப்பெண்கள் முறையினால், கடந்த 2019-2020ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத 32,262 பேரை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog