Breaking

Sunday, May 02, 2021

பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்ய வழக்கு

மதுரை:மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்களாக, மூன்று பேராசிரியர்களை நியமித்ததை ரத்து செய்ய கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்தது. மதுரை மாவட்ட, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய செயலர் லயோனல் அந்தோணிராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்களாக, பேராசிரியர்கள் சுதா - வெளிநாட்டு மொழிகள் துறை தலைவர், தங்கராஜ் - கணினி அறிவியல் துறை தலைவர், நாகரத்தினம் - தகவல் தொடர்புத் துறை தலைவர், ஆகியோர், 2020 டிசம்பரில் நியமிக்கப்பட்டனர்.இவர்கள், மூன்று ஆண்டுகள் சிண்டிகேட் உறுப்பினர்களாக இருப்பர். பல்கலை துணைவேந்தரின் பரிந்துரை அடிப்படையில், வேந்தர் நியமித்துள்ளார். துணைவேந்தராக செல்லதுரை பதவி வகித்த காலகட்டத்தில், பணி நியமனம், பதவி உயர்வில் விதிமீறல்கள் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது.அக்குழு, '36 இணை பேராசிரியர்களுக்கு, பேராசிரியர்களாகவும், நான்கு உதவி பேராசிரியர்களுக்கு, இணை பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு அளித்ததில் குறைபாடுகள் உள்ளன; பல்கலை மானியக்குழுவின் விதிமுறைகளை பின்பற்றவில்லை' என அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இவர்களில், சுதா உட்பட மூன்று பேரும் அடக்கம். இவர்கள், சிண்டிகேட் உறுப்பினர்களாக பதவி வகிக்க, தகுதிகள் இல்லை. நியமனத்தில் விதிமீறல் உள்ளது. இவர்களை, சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமித்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். நியமனம் செல்லாது என, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு, ஜூன் 1க்கு ஒத்தி வைத்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog