TNPSC தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடு தமிழகத்தின் மெகா வியாபம் ஊழல்: டிஎன்பிஎஸ்சி நம்பகத்தன்மை கேள்விக்குறி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 03, 2020

Comments:0

TNPSC தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடு தமிழகத்தின் மெகா வியாபம் ஊழல்: டிஎன்பிஎஸ்சி நம்பகத்தன்மை கேள்விக்குறி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 2008 முதல் 2018 வரை பாஜ ஆட்சியின் போது, அரசு பணியிடங்கள் நிரப்புவதில் பெரும் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சாதாரணமாக தான் தகவல்கள் வந்தன. சிபிஐ வசம் போன பின், இந்தியாவையே மலைக்க வைக்கும் அளவுக்கு 20,000 கோடி ரூபாய் அளவுக்கான ஊழல் என்று உறுதியானதுடன், உயர் அதிகாரிகள் மட்டுமல்ல, ஆளுநர் வரை கூட குற்றச்சாட்டு எழுந்தது. 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகள் கண்டறியப்பட்டு நீதிமன்றம் தண்டனை அளித்தது. இதோ, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடும் ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் தகவல்கள் வெளியானது.
அடுத்து, குரூப் 2 ஏ, வேளாண்மை பொறியாளர்கள் நியமனம், குரூப் 1 என்று பல தேர்வுகளிலும் சந்தேகக் கணைகள் பாயத்துவங்கின. டிஎன்பிஎஸ்சியே முன்வந்து, ‘ஏதோ நடந்திருக்கிறது’ என்று ஒப்புக்கொண்டு, சிபிசிஐடி விசாரணைக்கு கேட்டுக்கொண்டது. ஆனால், போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட புரோக்கர்கள் மூலம் நடந்த மோசடி அல்ல இது; உள்ளே பணியாற்றும் முக்கிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதை வெளியில் கொண்டு வர சிபிஐ விசாரணை தேவை, ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை தேவை என்ற குமுறல் கோரிக்கைகள் எல்லா முனைகளிலும் எழுந்துள்ளன. ஏதோ முறைகேடு நடந்தது என்பதால், டிஎன்பிஎஸ்சி நம்பகத்தன்மையை சந்தேகிக்க கூடாது என்று அரசு தரப்பில் நியாயப்படுத்தினாலும், பல லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய இந்த தமிழக வியாபம் ஊழல்களை வெளிக்கொணர வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோள்.
தேர்வர்களின் நிரந்தர முகவரி உள்ள மாவட்டத்தில் தான் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் * சமூக ஆர்வலர்கள் கோரிக்கை குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் தமிழகம் முழுவதும் இயங்கும் பயிற்சி மையங்கள்தான் முக்கிய குற்றங்களை செய்தவர்களாக உள்ளதால், அவர்களை கண்காணிக்க வேண்டும். தேர்வர்களை நிரந்தர முகவரி உள்ள மாவட்டத்தில் தான் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுக்களுக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு தனியார் பயிற்சி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி மையங்கள் புற்றீசல் போல பெருகி வருகிறது. எப்படியாவது அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் அதிக பணம் கொடுத்து பயிற்சி மையத்தில் சேர முன்வருகின்றனர்.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில மையங்கள் பணத்தை பிடுக்கும் மையங்களாக செயல்பட்டு வருகின்றன. சில மையங்கள் ஒவ்வொரு தேர்வுக்கு என்று ஒரு ரேட் வைத்து, அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் தேர்வில் தேர்ச்சி பெற வைத்து விடுவோம் என்று கூறி வருவதாக பரபரப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இந்நிலையில் தற்போது குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் தினமும் புதுப்புது தகவல் வெளியாகி வருகின்றன. டிஎன்பிஎஸ்சி நடத்தும் சாதாரண குரூப் 4 தேர்வுக்கே இந்த அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்றால், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1, குரூப் 2 தேர்வில் எந்த அளவுக்கு முறைகேடு நடந்திருக்கும் என கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதியவர்கள் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை தி.நகரில் உள்ள ஒரு பயிற்சி மையம் மூலம் முறைகேடு நடந்ததாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அது சம்பந்தமாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதில் ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான் தற்போது மேலும் பல பயிற்சி மையங்கள் முறைகேடு நடக்க தூண்டுகோலாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது, பல பயிற்சி மையங்கள் தங்கள் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு முழு மதிப்பெண்கள் பெற இடைத்தரகர்களை வைத்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இடைத்தரகர்கள் அவர்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை நாடி இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மையில் நடந்த குரூப் 1 தேர்வில் இதுபோன்று முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இந்த தேர்வில் வெற்றி பெற ₹50 லட்சம் முதல் ₹80 லட்சம் வரை பணம் கொடுக்கப்பட்டதாக தற்ேபாது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து பயிற்சி மையங்களை அமலாக்கத்துறை, வணிக வரித்துறை மற்றும் உளவு துறை அவ்வப்போது சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுக்க தொடங்கியுள்ளது. மேலும், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள், ஒரு குறிப்பிட்ட தேர்வு மையங்களில்தான் இதுபோன்ற முறைகேடுகள் அரங்கேறி வருகிறது. எனவே, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள் ஆதார் அட்டை அடிப்படையில், அவர்கள் நிரந்தர முகவரி உள்ள மாவட்டத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். அப்படி கட்டாயமாக்கினால் தான் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews