குறிப்பாக, காட்சி ஊடகங்களில் செய்தி வாசிப்பவர்கள், செய்தியாளர்கள், "மாடரேட்டர்ஸ்' உள்ளிட்டோரின் லகர, ழகர, ளகரத் தமிழ் உச்சரிப்பு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. குறைந்தபட்சம், சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர்களை அதுபோன்ற பணிகளில் அமர்த்த வேண்டும் என்கிற பொறுப்புணர்வுகூட இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
மேடையில் பேசும் இன்றைய இளைய தலைமுறைகளும் சரி, பலருக்குத் தமிழ் எழுத்துகளின் சரியான உச்சரிப்பு வருவதில்லை. பொதுவாக உச்சரிப்பில் தவறு செய்பவர்களுக்கு அவர்கள் பிழை அவர்களுக்கே தெரியாது. தெரிந்திருந்தால் அவர்கள் மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யக்கூடும்.
பள்ளியில் படிக்கும்பொழுதே ல, ள, ழ - ந, ண, ன - ர, ற - என்ற எழுத்துகளை உச்சரிக்கும்பொழுது, சரியாக உச்சரிக்கப் பழக்க வேண்டும். சிறுவயதில் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியாகப் பேசவைத்தும், படிக்க வைத்தும் பள்ளிப்பருவத்திலேயே சரியாகக் கற்றுக் கொடுத்தால், பிழை நிச்சயமாக வராது. எனவேதான், "இளமையில் கல்' என்று ஒளவையார் சொல்லியிருக்கிறார்.
தமிழாசிரியர்களுக்கும், மேடையில் ஏறிப் பேசும் மாணவர்களுக்கும், தமிழில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கும் உச்சரிப்புப் பயிற்சி கொடுக்க வேண்டும். உச்சரிப்பில் குழப்பம் தரும் இடங்கள் மூன்று. அவை:
1. ல, ள, ழ; 2.ண, ந, ன; 3. ர, ற. இவ்வெழுத்துகளைத் தவறாக உச்சரித்தாலும், ஓர் எழுத்துக்குப் பதிலாக வேறோர் எழுத்தை எழுதினாலும் பொருளே மாறுபடும். விபரீதமான பொருளும் உண்டாகும். எனவே, இவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
ல, ள, ழ, ண, ந, ன, ர, ற எழுத்துகள் பிறக்கும் இடம்: லகரம் - மேல்வாய் முன் பல்லின் உட்பகுதியை நுனி நாக்கு லேசாகப் பொருந்தும்போது "ல' பிறக்கும். (எ.கா.) பல, வால், மலர். ளகரம் - நாவின் ஓரம் தடித்து நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து, மேல் அண்ணத்தின் நடுப்பாகத்தைத் தடவுவதால் "ள' பிறக்கும். (எ.கா) வாள், கள், முள்.
றகரம் - நுனிநா நுனி அண்ணத்தை நன்றாகப் பொருந்தி வெளிவருவதால் "ற' பிறக்கும். (எ.கா) அறம், மறம், கறை, பிறை. இவ்வாறாக எழுத்துகள் பிறக்கும் என்ற இலக்கணத்தைச் சொல்வதால் எல்லோராலும் பின்பற்றுதல் எளிமை என்று நினைத்து விடக்கூடாது. சிக்கலான எல்லா எழுத்துகளும் வரும்படியான வார்த்தைகளைப் பேசிப் பேசி பயிற்சி பெறலாம். "வாழைப் பழத்தோல் வழுக்கிக் குழந்தை சாலையில் விழுந்தாள்'; "அன்னப்பறவை தண்ணீரை நீக்கிப் பாலை அருந்தியது'; "மரத்தை அறுக்கும் கருவிகள்' - இப்படிப் பல தொடர்களை உருவாக்கிப் பயிற்சிகள் கொடுத்தால் தமிழும் சிறக்கும், ஒலிப்பும் இனிமையாகும். - முனைவர் விஜயலட்சுமி இராமசாமி