நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 11, 2019

நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் ஏன் அமையவில்லை என்பது குறித்து ஓர் அலசல்! பெற்றோர்களுக்கு இன்றிருக்கும் பெரும் தவிப்பு, தங்கள் பிள்ளைகளுக்குச் சரியான கல்வியைத் தேர்வு செய்வதுதான். தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக, வீட்டையும் வேலையையும்கூட மாற்றிக்கொள்வோர் இருக்கிறார்கள். எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்ற கேள்வியில் தொடங்கி, எந்தப் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்வது என்பதுவரை ஏகப்பட்ட குழப்பங்கள், சந்தேகங்கள். "தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்... நவோதயா பள்ளிகள் வந்தால் தமிழக மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கும்தானே..?" என்பது கேள்வி. இந்தக் கேள்விக்கு விடைகாண, நவோதயா பள்ளிகள் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நவோதயா பள்ளிகள் சுருக்கமான அறிமுகம்!
தமிழ்நாட்டைத் தவிர, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா பள்ளிகள் உள்ளன. நமக்கு அருகில் என்றால், புதுச்சேரியில் நவோதயா பள்ளி உண்டு. 1986-ம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை வெளியான பிறகு. மத்திய அரசு 'ஜவஹர் நவோதயா பள்ளிகள்' என்ற பெயரில் மாதிரி பள்ளிகளைத் தொடங்கியது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை உள்ள இந்தப் பள்ளியில், நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கும். 8-ம் வகுப்புவரை பயிற்று மொழி, தாய்மொழி அல்லது மாநில மொழியாக இருக்கும். அதன்பிறகு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் வழியாகவும் சமூக அறிவியல் பாடங்கள் இந்தி அல்லது ஆங்கிலம் வழியாகவும் பயிற்றுவிக்கப்படும். முழுவதும் மத்திய அரசின் நிதியில் இயங்கும் இந்தப் பள்ளிகள் இருபாலாரும் பயிலும் உறைவிடப் பள்ளிகளாகச் செயல்படுகின்றன. உணவு, சீருடை, பாடநூல்கள் உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் குறைந்தபட்ச கட்டணமாக 600 ரூபாய் பெறப்படுகிறது. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் எனில், மாதந்தோறும் ரூபாய் 1,500 அல்லது அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பெறுகின்ற குழந்தைகள் கல்வி உதவித் தொகை இவற்றில் எது குறைவானதோ அது வசூலிக்கப்படும். தமிழகம் நீங்கலாக, இந்தியா முழுக்க தற்போது 636 நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. நவோதயா பள்ளிகள் குறித்த விரிவான தகவல்களை https://navodaya.gov.in/nvs/en/Home1/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
சரி... இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நவோதயா பள்ளிகளை வரவேற்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்ப்பு..? அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறார். "இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு நவோதயா பள்ளி தொடங்குவதுதான் மத்திய அரசின் திட்டம். கிராமப்புற மக்கள், பழங்குடி மக்கள், பெண்கள் என அடித்தட்டு ஏழை மக்களுக்கும் நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் நவோதயா பள்ளிகள் உருவாக்கப்பட்டன. வழக்கமான பள்ளிகளைப்போல இல்லாமல் தங்கிப் படிக்கும் வசதியும் நவோதயாவில் உண்டு. இதற்கான கட்டடம், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. மாநில அரசு அப்பள்ளிக்கு உரிய இடத்தை மட்டும் அளித்தால் போதும். வேறெந்த செலவும் அதற்கு கிடையாது. நவோதயா பள்ளியைச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர், மத்திய அரசின் பிரதிநிதி, பெற்றோர், அந்த ஊரின் முக்கியமான நபர்கள் உள்ளிட்ட ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் வழிகாட்டலின்படியே பள்ளி இயங்கும். பள்ளியில் இட ஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படும். கட்டணமும் பெயரளவுக்கு, குறைவான தொகையே வாங்கப்படுகிறது. குறிப்பிட்ட சிலருக்கு அதுவும் வாங்குவது இல்லை. 'நவோதயாவில் இந்தி கற்பிக்கப்படுகிறது அதனால், அப்பள்ளி எங்களுக்கு வேண்டாம் என்று தமிழகத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். இது சரியல்ல. ஏனென்றால், தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. 'அந்தப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கலாம், நவோதயாவில் கூடாது' என்பது என்ன லாஜிக்..? அடுத்து, நவோதயா பள்ளிகளில் மட்டுமே உங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்று எந்தப் பெற்றோரையும் யாரும் வலியுறுத்தப்போவதில்லை. விருப்பம் உள்ள பெற்றோர் பள்ளியில் சேர்க்கப்போகிறார்கள். சிலர், 'எல்லோருக்கும் நவோதயா பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா' என்று கேட்கிறார்கள். ஒரு நவோதயா பள்ளியில் ஒரு வகுப்புக்கு 80 பேர் என்றால், 6 முதல் 12-ம் வகுப்பு வரை 560 பேர் படிக்கலாம். தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களுக்கும் என்றால், 19,600 மாணவர்கள் பலன் அடைவார்கள். அதுவும், மாநில அரசுக்கு எந்தவித நிதி சுமையும் அளிக்காமல்! இதை ஏன் தடுக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை" என்கிறார் அவர்.
இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்? சமத்துவக் கோட்பாட்டுக்கு எதிரானது 'பொதுப்பள்ளிக்கான மாநில மேடை' அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு விரிவாகப் பேசுகிறார். "1947-ம் ஆண்டு விடுதலையடைந்த இந்தியா, 1950-ம் ஆண்டு குடியரசானது. அப்போதைய சட்டப்படி 14 வது சட்டப்பிரிவு, 'சமத்துவக் கோட்பாட்டை'யும், 45 வது சட்டப்பிரிவு, '14 வயதுக்குட்பட்டவர்களுக்குக் கட்டணமில்லாக் கல்வி' என்பதையும் வலியுறுத்துகிறது. நாடு முழுக்க கல்வியைப் பரவலாக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். 1968-ம் ஆண்டு கல்விக் கொள்கையில் பொதுக்கல்வி முறைமை பற்றிக் குறிப்பிட்டிருப்பது என்னவெனில், 'மாணவர்களுக்கு என்னென்ன வசதிகள் இருந்தால் அவர்கள் நன்கு கல்வி கற்க முடியும் என முடிவெடுக்கிறார்களோ, அவையெல்லாம் அனைத்துப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும். அதுதான் சமமான கற்றல் வாய்ப்பு...' இதை அரசு மட்டுமே கொடுக்க முடியும். ஆனால், விடுதலைக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் கழித்து 1986-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை, மேலே சொன்ன சட்டப்பிரிவு 45 மற்றும் 14-க்கு முரணாக அமைந்தது. அதில்தான் இந்த நவோதயா பள்ளிகள் இடம்பெற்றன. நவோதயாவில் மாவட்டத்துக்கு ஒரு பள்ளி மட்டும் என்று சொல்கிறார்கள். பழங்குடி மக்கள் அதிகமாக இருந்தால், அந்தப் பகுதியில் பள்ளி அமைக்கப்படும். எப்படிப் பார்த்தாலும் மாவட்டத்துக்கு ஒன்றுதான். மேலும், வகுப்புக்கு இரு பிரிவுகள் மட்டுமே. ஒவ்வொரு பிரிவிலும் 40 மாணவர்கள். ஆக, ஒரு வகுப்பில் 80 மாணவர்கள் படிக்கும் வாய்ப்பு. இதை மாதிரி பள்ளி என்றே அடையாளப்படுத்துகிறார்கள். விடுதலைப் பெற்று 40 ஆண்டுகள் கழித்துதான் மாதிரி பள்ளியை அரசு தொடங்குகிறது. அதுவும் மாவட்டத்துக்கு ஒன்று... அதிலும் ஒரு வகுப்புக்கு 80 மாணவர்கள் மட்டுமே படிக்கும் வகையில்... இது என்ன நியாயம்?
ஆறாம் வகுப்பிலிருந்து நவோதயா பள்ளிகள் இயங்குகின்றன. ஒரு நுழைவுத்தேர்வு எழுதித்தான் பள்ளியில் சேரமுடியும். பழங்குடி இன, ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு இந்த முறை எந்தளவுக்கு உகந்ததாக இருக்கமுடியும்? 'நவோதயா பள்ளிகள் அமையும் மாநிலங்களில் அவரவர் தாய்மொழியில் முழுமையான கல்வி கற்கலாம்' என்று அறிவிக்கத் தயங்குவது ஏன்? ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் தவிர்த்து மூன்றாம் மொழி என்பது 8-ம் வகுப்பு வரையில்தானே... பழங்குடி மக்களுக்குத் தாய்மொழி இல்லையெனும்போது அவர்களுக்குக் கல்வி அந்நியமாகி விடுகிறதே? நவோதயாவில் கலை, விளையாட்டு, மொழி என ஏராளம் கற்கலாம் என்கிறார்கள். அதை எல்லோருக்கும் கொடுக்கலாமே என்பதுதான் எங்களின் கோரிக்கை. இதை முன்னிறுத்தியே நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்" என்றார் அவர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews