`தமிழக இளைஞர்களை அரசுப் பணிகளுக்கு வராமல் தடுக்க சதி!’ - டி.என்.பி.எஸ்.சி(TNPSC) மீது குற்றச்சாட்டு-Vikatan News - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 08, 2018

`தமிழக இளைஞர்களை அரசுப் பணிகளுக்கு வராமல் தடுக்க சதி!’ - டி.என்.பி.எஸ்.சி(TNPSC) மீது குற்றச்சாட்டு-Vikatan News

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 11-ம் தேதி துவங்குகிறது. இதில் சில வினாத்தாள்கள் தமிழில் வழங்கப்படமாட்டாது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது, 'தமிழ்நாட்டு இளைஞர்களை அரசுப்பணிகளுக்கு வரவிடாமல் தடுப்பதற்கான திட்டமிட்ட சதி' என தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் இதுகுறித்து நம்மிடம் பேசிய கி.வெங்கட்ராமன், ’’கூட்டுறவு சங்கங்களின் ஆய்வாளர், பல துறைகளின் உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 23 துறை பணிகளில் 1199 காலி இடங்களை நிரப்புவதற்கு நடைபெற உள்ள இத்தேர்வில் சமூகவியல், அரசியலறிவியல் உள்ளிட்ட பல தாள்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் கூறும் காரணம் நகைப்புக்கு உரியதாக இருக்கிறது; நம்பும்படியாக இல்லை. தமிழில் வினாத்தாள் தயாரிக்கத் தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இல்லை என்று அவர் காரணம் கூறுகிறார். தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படாமல் போனால், தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களை வரவிடாமல் தடுக்கும் இனப்பாகுபாட்டுக் கொள்கையை தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது என்பதே பொருள். தமிழர்களுக்கு எதிரான இந்த இன ஒதுக்கலை அனுமதிக்க முடியாது. குரூப் - 2 தேர்வு எழுதும் 6.26 லட்சம் தேர்வர்களில் 4.80 இலட்சம் பேர் பொது அறிவு மற்றும் தமிழை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
இந்நிலையில், இப்போட்டித் தேர்வில் தமிழில் வினாக்கள் கேட்கப்படாமல் ஆங்கிலத்தில் மட்டும் கேட்கப்பட்டால், மிகப்பெரும்பாலான தமிழ்நாட்டு இளைஞர்களைத் தேர்வு எழுத வருவதற்கு முன்னாலேயே தோல்வி அடைந்தோர் பட்டியலுக்குத் தள்ளிவிடும். இது மிகப்பெரும் அநீதியாகும். சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களிலிருந்துதான் 25 விழுக்காடு மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இவ்வினாக்கள் தமிழில் இருக்காது என்றால், மேற்சொன்ன 4.80 லட்சம் தேர்வர்களைத் தோல்விப் பட்டியலில் தள்ளிவிடும். ஏற்கெனவே, டி.என்.பி.எஸ்.சி விதிகளில் இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், நேபாளம் பூட்டான் நாட்டவர்களும் வங்காள தேசம் இலங்கை நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் பங்குபெற்று தேர்வு எழுதலாம் என்று திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.
இச்சூழலில், டி.என்.பி.எஸ்.சி குரூப் -2 தேர்வில் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் இருக்கும் என்பது தமிழர்களைப் புறக்கணித்து வெளிமாநில மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு அளிக்ககூடிய தமிழ் இனப் பகை நடவடிக்கையாகும். தமிழக முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு, அனைத்துத் தேர்வுகளின் வினாத்தாள்களையும் தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குக் காலதாமதமாகும் என்றால், நவம்பர் 11 அன்று நடைபெற உள்ள குரூப் -2 தேர்வை தள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews