Breaking

Saturday, July 21, 2018

மாநில அரசின் அங்கீகாரம்: (CBSE)சி.பி.எஸ்.இ.,க்கு கட்டாயம்


'அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், மாநில அரசின் அங்கீகாரம் பெற்று, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை பின்பற்ற வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளிகள், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் வராமல், 'டிமிக்கி' கொடுத்து வந்தன. தன்னிச்சை சி.பி.எஸ்.இ., அதிகாரிகள், அங்கீகார பிரச்னையை கவனிக்கும் அதிகாரம், தங்களுக்கு இல்லை என்று கூறிய நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் வராமல், தன்னிச்சையாக செயல்பட்டு வந்தன.அதனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அதிக கல்வி கட்டணம், உள்கட்டமைப்பு கோளாறு, மாணவர்களுக்கான வசதிகள் பற்றாக்குறை என, பல பிரச்னைகள் ஏற்பட்டன. அதேபோல், தமிழக அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப மாணவர்களுக்கு, 25 சதவீத இலவச இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை.இதுகுறித்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளை எச்சரித்து, பல்வேறு முறை, தமிழக பள்ளிக் கல்வித் துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. மேலும், 'ஒவ்வொரு பள்ளியும், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, தடையில்லா சான்று பெறுவதும், அங்கீகாரம் வாங்குவதும் அவசியம்' என, பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், புதிய கல்வி ஆண்டு துவங்கியதும், சி.பி.எஸ்.இ., வாரியம் தரப்பில், பள்ளி களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. இதில், 'மாநில அரசின் விதிகளையும், அங்கீகாரத்தையும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளையும் மீறக் கூடாது' என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது: 

அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், தங்களது மாநில அரசின் கல்வித் துறையிடம் அங்கீகாரம் பெற்று, அதன் நகலை, வைத்திருக்க வேண்டும். மாநில அரசின் அங்கீகாரம் பெறாதவர்கள், உடனடியாக பெற வேண்டும். மாநில அரசுகளின் விதிகளின்படி, அங்கீகாரம் இல்லாத இடங்களில், கல்வி நிறுவனம் நடத்தக் கூடாது. அரசுத் துறைகளின் உரிய அனுமதியின்றி, பள்ளியை இயக்க கூடாது.அனைத்து பள்ளிகளுக்கும், தேசிய கட்டட விதிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை விதிகளுக்கு உட்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில அரசிடம், தீ தடுப்பு பாதுகாப்பு சான்றிதழ், சுகாதார சான்றிதழ், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி சான்றிதழ், கட்டட உறுதி சான்றிதழ் போன்றவற்றையும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மாநிலங்கள் இயற்றியுள்ள, இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின், அனைத்து விதிளையும் பின்பற்றி நடக்க வேண்டும்.இந்த விதிகள் குறித்து, பள்ளி நிர்வாகத்தினரிடம், பள்ளியின் தலைமை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். விதிகளை பின்பற்றாமல் பள்ளிகளை இயக்கினால், அந்த பள்ளிகள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதுடன், பள்ளிக்கான, சி.பி.எஸ்.இ., இணைப்பு, ரத்து செய்யப்படும்.இவ்வாறு அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog